காங்.க்கு எதிராக பிரசாரம் செய்யும் சமூக வலைதள ஊடகங்களை நசுக்குவோம்: ஷிண்டே
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தவறாக பிரசாரம் செய்யும் சமூகவலைதள ஊடங்களை நசுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கடந்த நான்கு மாதங்களாக காங்கிரஸ் கட்சிக்கும், எனக்கும் எதிராக பொய்யான தகவல்களை பரப்பிவரும் சமூகவலைதள ஊடகங்களை நசுக்க வேண்டும்.
இந்த ஊடகங்களில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியும். அவர்கள் அதனை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் நாம் அவர்களின் அத்தகையை நடவடிக்கைகளை நசுக்க வேண்டும்.
புலனாய்வுத் துறை எனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இது போன்ற வேலைகளை யார் செய்கிறார்கள் என்று எனக்கு தெரியும். என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியும். அவர்களுக்கு பின்னால் சில படைகள் செயல்படுகின்றன என்று ஷிண்டே கூறியிருந்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த மின்னணு ஊடகங்களைத்தான் ஷிண்டே மிரட்டியதாக கூறப்பட்டது. ஆனால் இதற்கும் விளக்கம் அளித்த ஷிண்டே, டி.வி. சேனல்கள் போன்ற மின்னணு ஊடகங்கள் நான் பற்றி பேசவில்லை; சமூகவலைதள ஊடகங்களை மட்டுமே நசுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு பேசினேன் என்று கூறியுள்ளார்.