6 மாசத்துக்கு முன்பே ரூ2,000 நோட்டு அடிச்சிருந்தா ரகுராம்ராஜன் கையெழுத்துதானே இருக்கனும்?
புதிய ரூ2,000 நோட்டில் தற்போதைய ஆளுநர் உர்ஜித் படேல் கையெழுத்து இடம்பெற்றுள்ளது சர்ச்சையாகி வருகிறது.
டெல்லி: புதிய ரூ2,000 நோட்டு வெளியிடப்பட்ட முதலே ஏகப்பட்ட சர்ச்சைகள்தான்... இப்போது அதில் கையெழுத்திடப்பட்டுள்ள ஆளுநரின் கையெழுத்து சர்ச்சையாக வெடித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட புதிய ரூ2,000 நோட்டில் இந்தி புகுத்தப்பட்டுள்ளதாக நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. தேவநாகரி எழுத்தை மத்திய அரசு புதிய ரூபாய் நோட்டில் திணித்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இதனிடையே புதிய ரூபாய் நோட்டு சாயம் போகிறது என ஒரு சர்ச்சையும் வெடித்தது. தற்போது புதிய ரூபாய் நோட்டில் உள்ள ஆளுநரின் கையெழுத்து தொடர்பாக பஞ்சாயத்து எழுந்துள்ளது.
மத்திய அரசோ 6 மாதங்களுக்கு முன்பே ரூ2,000 நோட்டு அச்சடித்துவிட்டோம் என்கிறது. அப்போது ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தவர் ரகுராம் ராஜன்தான். தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கடந்த செப்டம்பர் மாதம்தான் பொறுப்பேற்றார்.
6 மாதங்களுக்கு முன்னரே ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டிருந்தால் அப்போதைய ஆளுநர் ரகுராம்ராஜன் கையெழுத்துதானே இருக்க வேண்டும்... ஆகையால் மத்திய அரசு உண்மையை மூடி மறைக்கிறது என நெட்டிசன்கள் போட்டு தாக்கி வருகின்றனர்.