புதிய அணை கட்டுவதுதான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு ஒரே தீர்வு: உம்மன் சாண்டி பிடிவாதம்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு புதிய அணை கட்டுவது மட்டும்தான் ஒரே தீர்வு என கேரள முதல் மந்திரி உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டும் கிடுகிடுவென உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 141 அடியை தாண்டி உச்சநீதிமன்றம் அனுமதித்த அளவான 142 அடியை எட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து கடந்த சில நாட்களாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில் கேரள அமைச்சரவை கூட்டம் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. அமைச்சரை கூட்டத்திற்கு பின்னர் கேரளா முதல்வர் உம்மன்சாண்டி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கேரளாவில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக இடுக்கி மாவட்டம் முல்லைப்பெரியார் அணையின் நீர் மட்டம் 142 அடியாக உயர்ந்துள்ளது.
மேலும் நீர் மட்டம் உயரும் நிலை உள்ளதால், உபரிநீர் இடுக்கி அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் நீரை திறப்பதற்கு 12 மணி நேரத்துக்கு முன்னதாக தங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுக்கவில்லை இந்த நடவடிக்கையை கேரள அரசு வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை இடுக்கி மாவட்ட மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.
அணையின் நீர் மட்டம் உயர்ந்த நிலையில் உபரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய அணை கட்டுவதுதான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு ஒரே தீர்வு. கேரள மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டியே தீருவோம். இன்று அல்லது நாளை அது நடந்தே தீரும். 999 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அணையின் பாதுகாப்பு குறித்து யாரேனும் உறுதியாக கூறமுடியுமா? எனவே புதிய அணை கட்டுவதே இந்த பிரச்சினைக்கு சிறந்ததாக இருக்கும்.
இதை மத்திய அரசிடமும், பிரதமரிடமும் எடுத்துரைக்க உள்ளோம். அதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையின் அனுமதி பெற வேண்டும். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஆதரவாக செயல்படுவதாக நினைக்கவில்லை. ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர், கேரளாவிற்கு பாதுகாப்பு என்பதில் கேரள அரசு உறுதியாக உள்ளது. முல்லைப்பெரியாறு பிரச்சினை தொடர்பாக மத்திய நீர் வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்போம் என்றார் உம்மன்சாண்டி.