பிஎஃப் புதிய விதிமுறைகள் ரத்து - தொழிலாளர்களின் எதிர்ப்புக்கு மத்திய அரசு பணிந்தது
டெல்லி:பி.எஃப். தொகையை மொத்தமாக எடுப்பதை கட்டுப்படுத்தும் புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. 58 வயது நிரம்பியவர்கள் மட்டுமே பி.எஃப்பில் முழு பணத்தையும் எடுக்க முடியும் என்ற புதிய விதிமுறைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
முறைப்படுத்தப்ப நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஃஎப்) திட்டத்தின் கீழ் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த பணம் ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது பெற்றுக்கொள்ளலாம்.
இது தவிர, வீடு கட்டுதல், குழந்தைகள் படிப்புச்செலவு போன்ற மிக அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது. மேலும், ஒரு நிறுவனத்தின் வேலையில் இருந்து விலகிய பின்னர் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு வேலையில்லாமல் இருந்தால், அவர் தனது பி.எஃப். கணக்கில் உள்ள முழு தொகையையும் திரும்பப் பெற முடியும்.
இந்நிலையில் தொழிலாளர்கள் நலன் கருதி வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி ஒரு அறிவிக்கை வெளியிட்டது.
அதன்படி தொழிலாளர் வைப்பு நிதி தொகையில் இருந்து நூறு சதவீதம் தொகையை எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
58 வயது நிரம்பிய தொழிலாளர்கள் மட்டுமே பி.எஃப்பில் இருந்து நிறுவனத்தின் பங்களிப்பு தொகையை எடுக்க முடியும். ஏதாவது காரணத்திற்காக 58 வயதுக்குள் தொழிலாளர்கள் வேலையில் இருந்து நின்று விட்டால், அவர்களது சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் வைப்பு நிதியை மட்டுமே பெற முடியும்.
இதற்கு தொழிற்சங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இனால் ஏப்ரல் 30ம் தேதி வரை புதிய பி.எப் திட்டத்தை அமல்படுத்தும் அறிவிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மே 31 வரை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த கால அவகாசம் முடிந்து மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த புதிய விதிமுறைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. பிஎஃப் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து பல்வேறு ஆயத்த ஆடை நிறுவனங்களைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெங்களூரில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய மாற்றத்தை கைவிடக்கோரி பெங்களூர்-ஓசூர் சாலையில் உள்ள பொம்மனஹள்ளி ஜங்க்சனில் நடந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் கூட்டத்தினரை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீச வன்முறை வெடித்தது.
மூன்று பேருந்துகள் கல் வீசித் தாக்கப்பட்டன. ஜலஹள்ளி பகுதியில் மூன்று பேருந்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. நாகசந்திரா மற்றும் யேஸ்வந்த்பூர் இடையேயான "நம்ம மெட்ரோ" சேவையும் நிறுத்தப்பட்டன. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர போலீஸ் துப்பாக்கிச் சூடும் நடந்தது.
ஜலஹள்ளிப் பகுதியில் போலிஸார் வாகனம் கற்கள் வீசித்தாக்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டதால் பெங்களூரு முழுவதும் பதட்ட நிலை நிலவுகிறது. பெங்களூரு முழுவதும் பேருந்துப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக எல்லையோர ஊர்களான ஒசூர், தருமபுரிக்கும் பெங்களூருவில் வரும் பேருந்துகள் நிறுத்தப்பட்டு பின்னர் பதற்றம் தணிந்த பின்னர் இயக்கப்பட்டன.
இதனிடையே தொழிலாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்திய அரசு பணிந்தது. வருங்கால வைப்பு நிதிக்கான (இபிஃஎப்) புதிய விதிமுறைகள் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மே 1 முதல் அமலுக்கு வரவிருந்த இந்த திட்டம் ஜூலை 31ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறினார். மேலும், இதுகுறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, பி.எஃப். பணத்தை எடுப்பதில் கட்டுப்பாடுகளை விதிக்கும் மத்திய அரசின் அறிவிக்கையை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக அறிவித்தார். பி.எஃப். பணத்தை கையாள்வதில் பழைய நடைமுறையே தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிஎஃப் பணத்தை எடுப்பதில் பழைய முறையே அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.