உடனே வெளியேறுங்க.. மிரட்டிய சீன வீரர்கள்.. லடாக் அருகே இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் மோதல்
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் அருகே ஏரிப்பகுதியில் இருந்த இந்திய ராணுவ வீரர்களை வெளியேறுமாறு சீன ராணுவ வீரர்கள் மிரட்டியதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக கடந்த மாதம் பிரிக்கப்பட்டது. லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்ததை சீனா ஏற்கவில்லை. இதற்காக சீனா இந்தியா மீது கோபத்தில் இருக்கிறது.
இதன் காரணமாக அண்மைக்காலமாக சீனா இந்தியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள பாங்கோங் ஏரியை சுற்றியுள்ள பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பதில் இந்தியா மற்றும் சீனா ராணுவத்தினரிடையே நீண்ட காலமாக மோதல் இருக்கிறது. இந்த சூழலில் நேற்று காலை இந்திய ராணுவத்தினர் பாங்கோங் ஏரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர்.
கோவையில் லஷ்கர் தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லை.. போலீஸ் தகவல்.. மக்கள் நிம்மதி
அவர்களை பார்த்த சீன ராணுவத்தினர், உடனே வெளியேறும்படி கூறி வாக்குவாதம் செய்தனர். அதற்கு இந்திய ராணுவத்தினர் மறுப்பு தெரிவித்ததுடன் இது இந்திய எல்லைக்கு உள்பட்ட பகுதி தான் என்றும் இங்குதான் இருப்போம் என்றும் கூறினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. பின்னர் நீண்ட நேரம் கழித்து இருதரப்பினரும் தங்கள் முகாம்களுக்கு சென்றனர். இதனால் பாங்கோங் ஏரி பகுதியில் பதற்றம் காணப்பட்டது. பின்னர் இருதரப்பு பாதுகாப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சுமூக நிலை திரும்பியது.
இந்தியா சீனா ஆகிய நாடுகள் 3,488 கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இதில் அருணாச்சல பிரதேசத்தை தனது தன்னாட்சி பிரதேசமான திபெத்தின் ஒரு பகுதியாக சீனா உரிமை கோரி அடிக்கடி பிரச்சனை எழுப்பி வருகிறது. இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சனை 1960 முதல் தொடர்ந்து 45 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.