ராஜஸ்தான் ஆளுநராக கல்யாண்சிங் நியமனம்! கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆளுநர்களும் நியமனம்!!
டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய ஆளுநராக பாஜகவின் மூத்த தலைவரும் உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான கல்யாண்சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்தியில் மோடி அரசு பதவி ஏற்ற நிலையில் பி.எல் ஜோஷி (உத்தரப் பிரதேசம்), சேகர்தத் (சத்தீஸ்கர்), அஸ்வினி குமார் (நாகலாந்து), எம்.கே நாராயணன்(மேற்கு வங்காளம்), பிவி வான்சூ (கோவா). வைக்கம் புருஷோத்தமன் (மிசோரம்) ஆகியோர் அடுத்தடுத்து ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இவர்களில் எம்.கே.நாராயணன், வான்சூ இருவரும் ஹெலிகாப்டர் ஊழல் விசாரணையால் ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் இருந்து மிசோராம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டதால் தமது ஆளுநர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார் சங்கர நாராயணன்.
இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான், கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான கல்யாண்சிங், ராஜஸ்தான் மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராக இருந்த வித்யா சாகர்ராவ் மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநில சட்டசபை சபாநாயகர் வஜுபாய் ருதபாய் வாலா கர்நாடகா ஆளுநராகவும், பாரதிய ஜனதாவின் மகளிர் அணியின் முன்னாள் தலைவர் மிருதுளா சின்ஹா கோவா ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.