சபரிமலையில் இன்று புதிய கொடிமரம் பிரதிஷ்டை
சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதிய கொடி மரம் அமைக்க வேண்டும் என்று பிரசன்னம் கூறியதை தொடர்ந்து இன்று பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
பம்பை: பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதிய கொடி மரம் இன்று பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
சபரிமலை கோயிலில் புதிய கொடிமரம் அமைக்க வேண்டும் என்று தேவ பிரசன்னத்தில் சொல்லப்பட்டதை அடுத்து, கடந்த ஓராண்டாக புதிய கொடிமர வடிவமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
புதிய கொடி மரம் நிறுவுவதற்காக பத்தனம்திட்டை மாவட்டம், கோனி வனப் பகுதியில் இருந்து தேக்கு மரம் கொண்டு வரப்பட்டது. அது காயந்த பின்னர் பம்பை கணபதி கோயிலில் அமைக்கப்பட்ட 40 அடி நீளமுள்ள தொட்டியில் நல்லெண்ணையுடன் பல்வேறு மூலிகைகளை ஊற்றி 6 மாதங்கள் ஊற வைக்கப்பட்டது.
தங்க தகடுகள்
இதைத் தொடர்ந்து அந்த கொடி மரமானது கடந்த மாதம் சபரிமலைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. பின்னர் கொடிமரத்தில் தங்க தகடுகள் பதிப்பதற்கான பணிகள் நடைபெற்றன.
குதிரை வாகனம்
புதிய கொடி மரம் பிரதிஷ்டை இன்று நடைபெறுவதை முன்னிட்டு, கடந்த 19-ஆம் தேதி முதல் சபரிமலையில் ஆகமவிதிகளின்படி யாகங்கள் நடைபெற்றன. பின்னர் பம்பையில் இருந்து ஊர்வலமாக பக்தி பரவசத்துடன் கொண்டு வரப்பட்ட ஐயப்பனின் குதிரை வாகன சிலைக்கு சன்னிதானத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பிரதிஷ்டை
பல்வேறு கலை வேலைபாடுகள், சிற்பங்களுடன் கொடிமரத்தில் தங்க தகடுகள் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. இன்று 11.50 மணி முதல் 1.40 மணிக்குள் புதிய கொடி மரத்தை தந்திரி கண்டரரு ராஜீவரு பிரதிஷ்டை செய்து வைக்கிறார்.
10 நாள்கள் விழா
சபரிமலை ஐயப்பன் கோயில் திருவிழா 28-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 7-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.