புதிய இந்தியா உருவாக வேண்டும் என்பது 125 கோடி இந்தியர்களின் விருப்பமாகும்... மோடி
புதிய இந்தியா உருவாக வேண்டும் என்பது 125 கோடி இந்தியர்களின் விருப்பமாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
டெல்லி: புதிய இந்தியா உருவாக வேண்டும் என்பது 125 கோடி இந்தியர்களின் விருப்பமாகும் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, பொறுப்புள்ள குடிமகன்களாக தேசத்துக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை செய்யுமாறும் அழைப்பு விடுத்தார்.
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலியில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். இன்று மோடி வானொலியில் உரையாற்றியதாவது:
நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய சட்டசபை தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்று தனித்தும், கூட்டணி அமைத்தும் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளது. இந்த வெற்றிக்கு வித்திட்ட இந்தியர்களால் தேசத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை காட்டுகிறது.
புதிய இந்தியா
நாம் 21-ஆவது நூற்றாண்டில் வாழ்ந்து வருகிறோம். மாற்றம் வேண்டாம் என்று கூறும் இந்தியர்கள் யாரும் கிடையாது. புதிய இந்தியா என்பது அரசின் திட்டமோ அல்லது அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கையோ அல்ல. 125 கோடி இந்தியர்களின் விருப்பமாகும்.
குடிமகன்களுக்கு அழைப்பு
எல்லாவற்றுக்கும் அரசின் நிதியை எதிர்பார்க்கக் கூடாது. ஒவ்வொரு குடிமகன்களும் தேசத்துக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்வோம் என்று உறுதி எடுத்துக் கொண்டால் புதிய இந்தியா மற்றும் இந்தியாவில் ஒரு மாற்றத்தை விரைவில் காணலாம்.
சமூக சேவை...
சமூகத்தில் பல்வேறு தரப்பினர் ஏதாவது ஒருவகையில் சமூகத்துக்கு தங்களால் இயன்ற சேவைகளை ஆற்றி வருகின்றனர். சிலர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சேவை செய்கின்றனர். மற்றும் சிலர் ரத்தத்தை தானம் கொடுக்கின்றனர். மற்றும் சிலர் ஏழைகளுக்கு உணவளிக்கின்றனர்.
நமது மதிப்புகள் முக்கியமானது...
சமூக சேவைகள் என்பது நமது தேசத்தின் மதிப்புகளில் முக்கியமானதாகும். போக்குவரத்து விதிகளை மதித்து வாரத்தில் ஒரு நாள் டீசல், பெட்ரோலை பயன்படுத்தக் கூடாது என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும். இது போல் நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் நிலைய உள்ளன. அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக தீர்வு கண்டோமேயானால் புதிய இந்தியா என்ற இலக்கை விரைவில் எட்டிவிடலாம்.
முக்கிய அம்சங்கள்
பணமதிப்பிழப்புக்கு பிறகு, இந்தியாவில் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்தும் முறை அதிகரித்துள்ளது. கருப்புப் பணத்துக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும். 125 கோடி இந்தியர்களின் திறமை மற்றும் பலத்துடன் புதிய இந்தியா உருவாகும். சம்ப்ரான் சத்தியாகிரக போராட்டத்தின் 100 ஆண்டுகளை எட்டவுள்ளோம். இதுவே காந்தியடிகளின் முதல் போராட்டம் ஆகும்.
வங்கதேசத்துக்கு வாழ்த்து
வங்கதேச நாட்டின் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதில் வங்கதேச சகோதரர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறிய நரேந்திர மோடி, வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் நினைவுகளை கூர்ந்தார்.