அதிகம் பேர் விரும்பிப் படிக்கும் தமிழ் நாளிதழ், பத்திரிக்கை எது தெரியுமா?
டெல்லி: மீடியா ரிசர்சர்ச் யூஸர்ஸ் கவுன்சில் இந்திய வாசகர்கள் கணக்கெடுப்பு முடிவை வெளியிட்டுள்ளது. இதில் அதிக வாசகர்கள் கொண்ட முதல் 10 நாளிதழ்களில் இடம்பிடித்துள்ள ஒரே தமிழ் நாளிதழ் தினத்தந்தி ஆகும்.
மீடியா ரிசர்ச் யூஸர்ஸ் கவுன்சில் வாசகர்கள் எந்தெந்த நாளிதழ்கள், பத்திரிக்கைகளை அதிகம் விரும்பி படிக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பை நடத்தியது. இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரத்தை பார்ப்போம்.
தய்னிக் ஜாக்ரன்
இந்தியாவிலேயே அதிகமானோர் விரும்பி படிக்கும் நாளிதழ் தய்னிக் ஜாக்ரன் இந்தி நாளிதழாம். அந்த நாளிதழை 1 கோடியே 55 லட்சத்து 26 ஆயிரம் பேர் படிக்கிறார்களாம்.
ஒரே தமிழ் நாளிதழ்
அதிகமானோர் விரும்பிப் படிக்கும் நாளிதழ்களில் முதல் பத்து இடத்திற்குள் வந்துள்ள ஒரே தமிழ் நாளிதழ் தினத்தந்தி மட்டுமே. தினத்தந்தியை 81 லட்சத்து 56 ஆயிரம் பேர் விரும்பி படிக்கிறார்கள். ஏராளமானோர் விரும்பி படிக்கும் நாளிதழ்களில் இந்தியா அளவில் தினத்தந்திக்கு 5வது இடம் கிடைத்துள்ளது.
உள்ளூர் மொழிகள்
இந்திய மொழி நாளிதழ்களில் மலையாள மனோரமாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அந்த நாளிதழை 85 லட்சத்து 65 ஆயிரம் பேர் படிக்கிறார்கள். 81 லட்சத்து 56 ஆயிரம் வாசகர்களுடன் தினத்தந்தி இரண்டாவது இடத்தில் உள்ளது.
பத்திரிக்கைகள்
இந்திய மொழி பத்திரிக்கைகளில் முதல் 10 இடங்களில் 7 இடங்களை மலையாள பத்திரிக்கைகள் பிடித்துள்ளன. மலையாள பத்திரிக்கையான வனிதா 27 லட்சத்து 62 ஆயிரம் வாசகர்களுடன் முதலிடத்தில் உள்ளது.
குமுதம், குங்குமம்
இந்தியாவில் அதிகமானோர் விரும்பிப் படிக்கும் உள்நாட்டு மொழி பத்திரிக்கைகளில் 7 லட்சத்து 69 ஆயிரம் வாசகர்களுடன் குமுதம் 6வது இடத்திலும், 6 லட்சத்து 61 ஆயிரம் வாசகர்களுடன் குங்குமம் 8வது இடத்திலும் உள்ளன.