டாக்டர்கள் முகத்தில் குத்துவிட்டு சர்ச்சையில் சிக்கியவர் மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே
மத்திய அமைச்சராகியுள்ள அனந்தகுமார் ஹெக்டே மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தி சர்ச்சையில் சிக்கியவர்.
டெல்லி: கர்நாடகாவில் டாக்டர்களை சரமாரியாக தாக்கி சர்ச்சையில் சிக்கியவர்தான் தற்போது மத்திய அமைச்சராகியுள்ள அனந்தகுமார் ஹெக்டே.
மத்திய அமைச்சரவை நேற்று 3-வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. இணை அமைச்சர்களாக இருந்த 4 பேர் கேபினட் அமைச்சர்களாகினர். 9 பேர் இணை அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
அனந்தகுமார் ஹெக்டே
இவர்களில் அனந்தகுமார் ஹெக்டே கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
டாக்டர்கள் மீது தாக்குதல்
சில மாதங்களுக்கு முன்னர் கர்நாடகாவின் சிர்சி மருத்துவமனை ஒன்றில் தாயாரை அனந்தகுமார் ஹெக்டே சேர்த்திருந்தார். அவருக்கு சரியான சிகிச்சை தரவில்லை என கூறி அம்மருத்துவமனையின் டாக்டர்கள் முகத்தில் குத்துவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சை வெடித்தது. அனந்தகுமார் ஹெக்டே மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் ஒரு பக்கம் வலியுறுத்தி வரும் நிலையில் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது.
நிர்மலா சீதாராமன் விவகாரம்
இதேபோல் அனிதா உயிரை பறித்த நீட் விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் மீது தமிழகம் கடும் கோபத்தில் இருக்கிறது, இந்த நிலையில் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமனுக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டிருப்பதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.