சபரிமலை ஐயப்பனை தரிசிக்க பெண்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் - யாருக்கு தரிசனம் கிடைக்கும்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபாட்டுக்கு வரும் பெண்களுக்கான வயது வரம்பை கேரள அரசு அறிவித்துள்ளது.
சபரிமலை: ஐயப்பன் கோவிலில் வழிபாட்டுக்கு வரும் பெண்களுக்கான வயது வரம்பை கேரள அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 50 வயதுக்கு குறைவான பெண்கள் மற்றும் 65 வயதுக்கு அதிகமான பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை,மகரவிளக்கு பூஜைக்காக பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினசரியும் 2000 பக்தர்களும், சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களில் 3ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.
மண்டல மற்றும் மகர விளக்கு காலத்தில் கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதற்கான முன்பதிவு சிறிதுநேரத்திலேயே முடிந்து விட்டது. இதனால் முன்பதிவு செய்ய காத்திருந்த பல பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்தநிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபாட்டுக்கு வரும் பெண்களுக்கான வயதுவரம்பை கேரள அரசு அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்ப பக்தர்களின் சேவைகளுக்காக கேரள காவல்துறையுடன் இணைந்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு புதிய வலைதளத்தை தொடங்கியுள்ளது. சபரிமலைக்கு வரக் கூடிய பெண்களுக்கான வயதுவரம்பு குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் 50 வயதுக்கு குறைவான பெண்கள் மற்றும் 65 வயதுக்கு அதிகமான பெண்கள் சபரிமலையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கேரளாவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலையில் 17 பேருக்கு கொரோனா உறுதி - சன்னிதானத்தில் கூடுதல் கட்டுப்பாடு
கேரள காவல்துறையுடன் இணைந்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு புதிய வலைதளத்தை தொடங்கியுள்ளது. அதில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கொரோனா தொற்று காரணமாக 10வயதுக்கு குறைவான சிறுவர், சிறுமிகள் மற்றும் 65வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஏற்கனவே கேரள அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் என்.வாசு, அந்த வலைதளம் காவல் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. அதில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கும் தேவசம் போர்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது தொடர்பாக எந்த முடிவையும் தேவசம் போர்டு எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.