புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் தீபாவளி முதல் ரிலீஸ்
தீபாவளி முதல் புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் மக்களின் கைகளில் தவழ உள்ளது.
டெல்லி: புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டுக்களை தீபாவளி பண்டிகை முதல் ரிலீஸ் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர் பணமதிப்புடைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டன. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்பட்டன.
புதிய ரூபாய் நோட்டுக்கள்
10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளும், சில மாற்றங்களுடன் புதிய வடிவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, ஒரு ரூபாய் நோட்டும் புழக்கத்தில் விடப்படும் என்று கூறப்பட்டது.
200 ரூபாய் நோட்டு
2000 ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதை அடுத்து தற்போது 200 ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவுசெய்துள்ளது. பரிவர்த்தனைகளை எளிதாக்கும் நோக்கில், 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் கடந்த மாதம் தெரிவித்தது.
அச்சிடும் பணி தீவிரம்
இதனையடுத்து கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளத்தில், 200 ரூபாய் நோட்டுகள் ஜூலை மாதம் முதல் அச்சிடப்பட்டு வருகிறது. தீபாவளி முதல் 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வர உள்ளன. இந்த புதிய ரூபாய் நோட்டுக்கள் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கலந்த வண்ணத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் இயந்திரங்கள் மாற்றியமைப்பு
200 ரூபாய் நோட்டுக்களின் வடிவத்திற்கு ஏற்ப ஏடிஎம் இயந்திரங்களை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் வெளியான போது ஏடிஎம் இயந்திரங்கள் மாற்றியமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.