தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு உ.பி அரசு கெடுபிடி
தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க ஒரு நாளைக்கு 40 ஆயிரம் பேருக்கும் மட்டுமே அனுமதி வழங்க உ.பி அரசு முடிவு செய்து உள்ளது.
ஜெய்ப்பூர் : காதல் சின்னம் என்று சொல்லப்படும் தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க இனிமேல் தினமும் 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உத்திரபிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் அமைந்துள்ளது. ஷாஜகான் தனது காதல் மனைவியின் நினைவாக கட்டிய இந்த தாஜ்மகால், காதலின் சின்னமாக கருதப்படுகிறது. இதனால் இதனைக் காண உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்தியா வருகிறார்கள்.
தினமும் சராசரியாக 60 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் பேர் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட தாஜ்மகாலைக் காண ஆக்ராவிற்கு வருகை தருகிறார்கள். தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுப்பட்டால், தாஜ்மகால் கடந்து சில வருடங்களாக அதன் பொழிவை இழந்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதனால், மாசுப்பாட்டை தவிர்க்க அப்பகுதியில் இயங்கும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தீவிர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க வருபவர்களில் ஒரு சிலர் அதை அசுத்தப்படுத்துவதாகவும், அதிக எண்ணிக்கையில் பயணிகள் வருவதால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் சுற்றுலாத்துறை தெரிவித்து இருந்தது.
இதனடிப்படையில் தாஜ்மகாலைக் காண வரும் பயணிகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்து உள்ளது. அதன்படி, வருகிற ஜனவரி 20ம் தேதியில் இருந்து தினமும் 40 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த கட்டுப்பாடு இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த வித கட்டுப்பாடும் கிடையாது என்றும் அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.