புது செருப்பு கடிக்கத்தான் செய்யும்.. ஜிஎஸ்டி குறித்து மத்திய அமைச்சர் கருத்து
புது செருப்பு கடிக்கத்தான் செய்யும் என ஜிஎஸ்டி குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தூர்: புது செருப்பு கடிக்கத்தான் செய்யும் என ஜிஎஸ்டி குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் அருகேயுள்ள துத்கியா கிராமத்தில் மத்திய திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஜிஎஸ்டி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது பேசிய அவர் புது செருப்பு வாங்கும்போது 3 நாட்களுக்கு கடிக்கும், நான்காவது நாள் அது சரியாக பொருந்தி சொகுசாகிவிடும், அதுபோலதான் ஜிஎஸ்டியும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் என்றார்.
ஜிஎஸ்டியை அமல்படுத்தியன் மூலம் வரி செலுத்துவோர் அதிகரித்துள்ளனர் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். வரிமுறை எளிதாக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசு தவறிவிட்டது என காங்கிரஸ் குற்றம் சாட்டுவது தவறானது என்றும் அவர் கூறினார். கடந்த 3 தலைமுறைகளாக ஆட்சி செய்தவர்கள் தற்போது இளைஞர்கள் பற்றி முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் ஜிஎஸ்டியை "கபார் சிங் வரி" என்று கூறியது அவரது நாகரீகமின்மை என்றும் பிரதான் தெரிவித்தார்.