பெங்களூர் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஷாக்.. காமக்கொடூரர்கள் கையில் சிக்கி திணறிய பெண்கள்
பெங்களூர்: பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பலர் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் நகரின் எம்.ஜி.ரோடு பகுதியில் ஆண்டுதோறும் டிசம்பர் 31ம் தேதி இரவு ஆண்களும், பெண்களும் கூடி புத்தாண்டை வரவேற்பது வழக்கம்.
நகரிலுள்ள நவநாகரீக பெண்களும், ஆண்களும், அப்போது எம்.ஜி.ரோட்டில்தான் குவிந்திருப்பார்கள். இதில் பலரும் மது போதையில் தள்ளாடியபடியும் இருப்பார்கள்.
பாலியல் சீண்டல்
ஆண்கள் மற்றும் பெண்களின், இந்த நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட விஷமிகள் சிலர் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெரும் அமளியை ஏற்படுத்திவிட்டனர். கூட்டமாக சென்று பெண்களிடம் பாலியல் சேஷ்டைகளை அரங்கேற்றியுள்ளனர்.
போலீசாரிடம் தஞ்சம்
ஆபாசமாக கமெண்ட் அடிப்பது, கண்ட இடத்திலும் தொடுவது, அத்துமீறி நடப்பது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். பெண்களுடன் வந்திருந்த ஆண் தோழர்களால் இந்த விஷமிகளிடமிருந்து தங்கள் தோழிகளை காப்பாற்ற முடியவில்லை. இதனால் அலறியடித்து பெண் போலீஸ்காரரர்களிடம் ஓடிச் சென்று புகார் கூறினர் பெண்கள்.
ஆபாச அத்துமீறல்
தங்களது அங்கங்களை எப்படியெல்லாம் விஷமிகள் எப்படி தொட்டும், பலவந்தப்படுத்தியும் சேஷ்டைகள் செய்தனர் என்பதை பெண் போலீஸ்காரர்களிடம் பெண்கள் சொல்லும் காட்சிகள் ஆங்கில பத்திரிகையொன்றில் படங்களாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தடியடி
ஒரு கட்டத்தில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கும் அளவுக்கு, காமக்கொடூரர்கள் சேஷ்டைகள் இருந்தன என்றால் நீங்களே யூகித்துக்கொள்ளலாம். 1500 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு, பல சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்ட ஒரு இடத்தில் இதைப்போன்ற ஷாக் சம்பவம் நடந்துள்ளது அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு துரதிருஷ்டவச சம்பவம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சிகளை வைத்து விஷமிகளை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.