மொய்ப்பணம் ரூ. 11,25,000ஐ வறட்சியில் பாதித்த விவசாயிகளுக்கு தானமாக வழங்கிய மும்பை ஜோடி!
நவிமும்பை: நவிமும்பையில் திருமண விழாவில் கிடைத்த மொய்ப்பணமான ரூ. 11 லட்சத்து 25 ஆயிரத்தை வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு தானமாக வழங்கி, வித்தியாசமாக திருமண வாழ்வைத் தொடங்கியுள்ளனர் ஒரு புதுமணத்தம்பதி.
தானேயை சேர்ந்தவர் தேவேந்திரா என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரோஷினி என்பவருக்கும் நவிமும்பையில் உள்ள சான்பாடாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
முன்னதாக தங்களது திருமணத்தில் கிடைக்கும் மொய்ப்பணத்தை தங்களது சொந்த தேவைகளுக்குப் பயன்படுத்த விரும்பாத புதுமணத்தம்பதி, அவற்றை தானம் செய்ய முடிவெடுத்தனர்.
அதன்படி, மராட்டிய மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வறட்சி காரணமாக விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் குறித்து தேவேந்திரா - ரோஷினி தம்பதிக்கு தெரியவந்தது. இதைக்கேட்டு கவலையடைந்த அவர்கள், தங்களது மொய்ப்பணத்தை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தர முடிவெடுத்தனர். தங்களின் இந்த முடிவை அவர்கள் தங்களது பெற்றோரிடம் கூறி சம்மதம் வாங்கினர்.
அதனைத் தொடர்ந்து புதுமணத் தம்பதியின் நல்ல செயலை ஊக்குவிக்கும் வகையில் உறவினர்களும், நண்பர்களும் மொய்ப்பணத்தை சற்று அதிகமாகவே கொடுத்தனர். மணப்பெண்ணின் தந்தை மட்டும் விவசாயிகள் நிவாரண நிதிக்கு தனிநபராக ரூ.1 லட்சம் கொடுத்தார். மேலும் திருமண விழாவில் கலந்துகொண்ட வாஷி ஏ.பி.எம்.சி. வியாபாரிகள் 45 பேர் மொத்தமாக சேர்த்து ரூ.9 லட்சம் கொடுத்தனர். மொத்தமாக திருமண நிகழ்ச்சியில் ரூ. 11 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மொய்ப்பணம் வசூலானது.
இதனை அவர்கள் தனியார் தொண்டு நிறுவனம் வாயிலாக வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கணேஷ் நாயக் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.