கிப்ட் பாக்ஸில் "ஆணுறை.. " அதிர்ந்த மணப்பெண்கள்! முதல்வர் பங்கேற்ற திருமண நிகழ்ச்சியில் ஷாக்
போபால்: திருமண விழா ஒன்றில் மணப்பெண்ணுக்கு வழங்கப்பட்ட மேக்கப் கிட்டில் ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள்தொகை பிரச்சினையாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் தான் நாம் உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்து முதலிடத்திற்கு வந்தோம்.
மக்கள்தொகை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தென்மாநிலங்களில் மக்கள்தொகை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஷாக் சம்பவம்: ஆனால் வட மாநிலங்களிலும் இதே நிலை என்று சொல்ல முடியாது. இதற்கிடையே மத்தியப் பிரதேசத்தில் திருமண விழாவில் பெண்களுக்கு வழங்கப்பட்ட மேக்கப் கிட்டில் ஆணுறைகளும், கருத்தடை மாத்திரைகளும் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அம்மாநில முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வழங்கப்பட்டதால் இது பேசுபொருள் ஆகியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் சுமார் 300 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில்தான் பெண்களுக்கு வழங்கப்பட்ட மேக்கப் பெட்டியில் ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆணுறை, கருத்தடை மாத்திரைகள்: முதல்வர் சவுகான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள 296 பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதில் புதுமணத் தம்பதிகளுக்கு ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தம்பதிகளுக்கு வழங்கப்பட்ட மேக்-அப் பெட்டிகளில் இவை கண்டுபிடிக்கப்பட்டன.
மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அம்மாவட்டத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளைத் தந்திருக்கலாம் என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "மாவட்ட நிர்வாகம் தரப்பில் இவை தரப்படவில்லை.. எனவே, ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. குடும்பக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மாநில சுகாதாரத் துறை இப்படிச் செய்திருக்கலாம். இத்திட்டத்தில் கீழ் பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் ₹ 49,000 அளிக்கிறோம்.. அதேநேரம் அந்த குறிப்பிட்ட மேக்கப் கிட் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்படவில்லை" என்றார்.
கர்ப்ப பரிசோதனை: மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் திருமணங்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு முன்னெடுத்து வருகின்றனர். இந்தத் திட்டம் கடந்த மாதம் சர்ச்சையைக் கிளப்பியது. ஏனென்றால் திண்டோரியின் கட்சராய் பகுதியில் இத்திட்டத்தின் கீழ் நடந்த திருமண நிகழ்வில் சில மணப்பெண்களுக்குக் கர்ப்ப பரிசோதனை செய்யப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.
அதில் சில பெண்களுக்கு கர்ப்பம் பாசிட்டிவ் என்றும் வந்திருந்தது. தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் ஆணுடன் ஏற்கனவே ஒன்றாக வாழ்ந்து வருவதாக அந்தப் பெண் கூறியிருந்தார். ஆனாலும், திருமண நிகழ்வில் கர்ப்ப சோதனை நடத்தப்பட்டது சர்ச்சையானது. இருப்பினும் இது வழக்கமான சோதனை தான் என்றும் வயதை உறுதி செய்யவும் அவர்கள் திருமணத்திற்கு உடல் ரீதியாகப் பிட்டாக உள்ளனர் என்பதை உறுதி செய்யவே இப்படி சோதனை நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
"ஆணுறைகள்".. அத்தனை பேர் கூடியிருக்க.. மொத்தமாக குவித்து.. மலைத்து போன மக்கள்.. ஆமா, அதென்ன பேஷன் ஷோ