உபியில் பயங்கரம்... மறுவீடு சென்ற மணமகளை சுட்டுக் கொன்று கொள்ளை!
உத்தர பிரதேசத்தில் திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்கு சென்ற பெண்ணை சுட்டுக் கொன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மீரட்: திருமணம் முடிந்து, கணவர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த மணமகளைக் கொன்று, ஒரு கும்பல் கொள்ளையடித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் நெடுஞ்சாலை கொள்ளையர்கள் அட்டகாசம் மிகவும் அதிகமாகவே உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 58ல், மீரட் அருகே, நேற்று இரவு ஒரு காரில் வந்தவர்களை, கொள்ளை கும்பல் துப்பாக்கி முனையில் நிறுத்தியுள்ளது. நகை, பணத்தை தரும்படி கொள்ளையர்கள் மிரட்டியுள்ளனர். இதனிடையில் காரில் இருந்த 22 வயது இளம்பெண்ணை அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டனர்.
காரில் இருந்தவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள, நகைகள், பணத்தை கொள்ளையடித்து அந்த கும்பல் தப்பியோடிவிட்டது. குண்டடிபட்ட அந்த இளம் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
உயிரிழந்த பர்ஹானாவுக்கு நேற்று காலையில் தான் திருமணம் நடந்துள்ளது. காஜியாபாத்தை சேர்ந்த பர்ஹானாவுக்கும், முசாபர்நகரைச் சேர்ந்த முகமது ஷாஜெப்புக்கும் காஜியாபாத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது. அதன்பிறகு, கணவர் வீட்டுக்கு காரில் திரும்பும்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.