வாக்குப் பதிவு நாளில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை- டெலிவிஷனில் ஒளிபரப்ப தடை: தேர்தல் கமிஷன்
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி வரும் 7ம் தேதி வெளியிடுகிறது. அன்றைய தினம் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே அன்றைய தினம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டும் விளம்பரப்படுத்த முடியாத நிலை பா.ஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.
பாஜக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான குழு ஈடுபட்டது. எதிர்பார்த்த அளவுக்கு அதில் அம்சங்கள் இல்லாததால் சில மாற்றங்களை செய்யுமாறு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
இதன் காரணமாக தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு ஒரு வழியாக தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை வருகிற 7-ந் தேதி வெளியிட பாஜக முடிவு எடுத்தது.
லோக்சபா தேர்தல் 9 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு வருகிற 7-ந் தேதி நடக்கிறது. அசாம், திரிபுரா மாநிலங்களில் உள்ள 6 தொகுதிகளில் வாக்கு பதிவு நடைபெறுகிறது.
தேர்தல் நடைபெறும் தினத்தில் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிடுவதால் இதை டிவி சேனல்கள் ஒளிபரப்ப கூடாது, என்று தேர்தல் கமிஷன் தடை உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு ஒளிபரப்பு செய்வது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 126 (1), (பி) ஆகிய பிரிவை மீறிய செயலாகும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
ஓட்டுப் பதிவு முடிந்து 48 மணி நேரம் கழித்தே டி.வி சேனல்கள் ஒளிப்பரப்ப இயலும். 2-வது, 3-வது மற்றும் 4-வது கட்ட தேர்தல் நடைபெறுவதால் ஏப்ரல் 12 மாலை 6மணிக்கு பிறகே பாஜக தேர்தல் அறிக்கையை டிவி சேனல்கள் ஒளிபரப்பு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.