சிறுபான்மையின பெண்கள் என்றால் மோடி அமைதியாகிவிடுவார்.. அமெரிக்காவில் கப்பலேறிய மானம்!
டெல்லி: எப்போதும் ஏதாவது டிவிட் செய்து தன்னை திறமையான தலைவராக காட்டிக்கொள்ளும் இந்திய பிரதமர் மோடி, பெண்களுக்கும், சிறுபான்மையினருக்கும் ஒரு பிரச்சனை என்றால் அமைதியாகிவிடுகிறார் என்று அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ் தன்னுடைய தலையங்கத்தில் எழுதியுள்ளது.
இந்தியாவில் தற்போது அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகள் அதிகரித்து வருகிறது. பெண்கள் மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். அதேபோல் சிறுபான்மையின மக்களும் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.
இதிலெல்லாம் பாஜக கட்சியினரும் எதோ ஒரு வகையில் தொடர்பில் இருக்கிறார்கள். இதற்கு எதிராக மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் தன்னுடைய தலையங்கத்தில் எழுதியுள்ளது.
என்ன தலையங்கம்
நியூயார்க் டைம்ஸ் தன்னுடைய தலையங்கத்தில் ''எப்போதும் ஏதாவது டிவிட் செய்து தன்னை திறமையான தலைவராக காட்டிக்கொள்ளும் இந்திய பிரதமர் மோடி, பெண்களுக்கும், சிறுபான்மையினருக்கும் ஒரு பிரச்சனை என்றால் அமைதியாகிவிடுகிறார். பாஜக கட்சியை சேர்ந்தவர்களும், அதற்கு அடித்தளமான இயக்கத்தில் இருப்பவர்களும் இதுபோன்ற மோசமான செயலை செய்கிறார்கள். சில நாட்களுக்கு முன் காஷ்மீரில் 8 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டதற்கு எதிராக மக்கள் போராடிய போதும் கூட மோடி அமைதியாகவே இருந்தார். பாஜக கட்சியினர் ஏதாவது தவறு செய்தால் மோடி அமைதியாகிவிடுகிறார்'' என்றுள்ளனர்.
மோசம்
மேலும் ''இத்தனைக்கும் மத்தியில் இந்த குற்றத்தை செய்தவர்களுக்கு ஆதரவாக நடக்கும் ஊர்வலத்தில் பாஜக கட்சியினர் கலந்து கொள்கிறார்கள். பாஜக கட்சியை சேர்ந்த வக்கீல்கள், போலீஸ் சார்ஜ் சீட் அளிப்பதை கூட தடுக்கிறார்கள். இதேபோல் உத்தரபிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ ஒரு பெண்ணை வன்புணர்வு செய்த வழக்கிலும், மோடி பேசவேயில்லை. இதில் அந்த பெண்ணின் தந்தை போலீஸ் கஸ்டடியில் மரணம் அடைந்து இருக்கிறார்'' என்று எழுதியுள்ளது.
பேசினார்
மேலும் ''மோடி கடைசியில், இது இந்தியாவிற்கு பெரிய அவமானம் என்று பேசினார். ஆனால் அவரது வெறுமையான பேச்சு வந்ததே நீண்ட நாட்களுக்கு பின்தான். இதேபோல்தான் பாஜக கட்சியினர் சிறுபான்மையின மக்களை பசுக்களின் பெயரை சொல்லி கொலை செய்த போதும் மோடி அமைதியாக இருந்தார்'' என்று குற்றச்சாட்டு வைத்துள்ளது.
காங்கிரஸ் அரசு
மோடியின் அமைதி பழைய இந்திய அரசாங்கத்தை நினைவுப்படுத்துகிறது. டெல்லியில் மாணவி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட போது முந்தைய காங்கிரஸ் அரசு பேசாமல் அமைதியாக இருந்தது. தேர்தலில் அது எதிரொலித்து. மோடி நல்ல, மக்களிடம் உரையாடக்கூடிய அரசை உருவாக்குவார் என்றுதான் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அவரே அமைதியாக இருக்கிறார் என்று நியூயார்க் டைம்ஸ் தன்னுடைய தலையங்கத்தில் எழுதியுள்ளது.