3வது அணியில் இணைகிறார் ஜெகன் மோகன் ரெட்டி?
ஹைதராபாத்: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, தேசிய அளவிலான 3வது அணியில் இணைய திட்டமிட்டுள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டி ஜாமீனில் விடுதலையான உடனேயே அவரது தாயார் விஜயலட்சுமி, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு நன்றி தெரிவித்திருந்தார். இதனால் காங்கிரஸ், ஜெகன் மோகனுடன் சமரசம் செய்யப் போவதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் ஜெகன் மோகனோ, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவுக்கு மாற்றான ஒரு மதச்சார்பற்ற அணியில் இணைவதுதான் சரியானது என்று கருத்து தெரிவித்திருக்கிறார். என்ன இழப்பு ஏற்பட்டாலும் மதச்சார்பின்மை என்ற கொள்கையில் உறுதியோடு எப்போதும் இருப்போம் என்று தமது கட்சி நிர்வாகிகளிடம் ஜெகன் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக பிஜூ ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தவும் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி 2 யாத்திரைகளை ஜெகன் நடத்த திட்டமிட்டிருக்கிறார். ஒருங்கிணைந்த ஆந்திரா கோரிக்கையை ஆதரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மற்றும் மஜ்லிஸ் கட்சித் தலைவர்களை சந்திக்கவும் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்திருக்கிறார்.