ஜனாதிபதி வேட்பாளர் யார்? அமித்ஷா தலைமையில் ராஜ்நாத், ஜேட்லி, வெங்கையா குழு!
டெல்லி: ஜனாதிபதி வேட்பாளராக அடுத்து யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அமித் ஷா தலைமையில் மூவர் குழு பாஜக சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் தங்கள் கட்சியை சேர்ந்த ஒருவர்தான் ஜனாதிபதி மாளிகையில் குடியேற வேண்டும் என பாஜகவும், எதிர்க்கட்சிகளும் கடுமையாக போராடி வருகின்றனர்.
அதற்கேற்றாற் போல் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேட்பாளரை தேர்வு செய்ய போட்டா போட்டி நடக்கிறது. அதேசமயம் மதசார்பற்ற வேட்பாளர் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன.
இதனிடையே ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை 20-ஆம் தேதி நடைபெறும்.
இதற்காக அவ்வப்போது ஆலோசனைகளும் நடைபெற்று வருகின்றனர். எதிர்க்கட்சிகள் தங்களது வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் அறிவிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வுக்கான குழுவை பாஜக அமைத்துள்ளது.
அதில் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, அமித் ஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். துணை ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு வெங்கையாவின் பெயர் அடிப்பட்ட நிலையில் அவர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளதால் அவருக்கு அப்பதவி இல்லை என்றே தெரிகிறது.