ஐடி ரெய்டு அச்சம்: ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக இரண்டு கோஷ்டியும் ஆதரவு?
ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை அதிமுகவின் இரண்டு கோஷ்டிகளும் ஆதரிக்கக் கூடும் என தெரிகிறது.
டெல்லி: வழக்கு விவகாரங்களில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி தேர்தலில் பாஜக நிறுத்தும் வேட்பாளாரையே அதிமுக கோஷ்டிகள் ஆதரிக்கக் கூடும் என தெரிகிறது.
தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால் ஜனாதிபதி வேட்பாளருக்கான பட்டியலை மத்திய பாஜக அரசு தயாரித்து வந்தது.
அதில் பாஜக மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. எனினும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கைவிட்டது பாஜக
இந்நிலையில் காக்கா எப்படா வடை போடும் என்றும் காத்திருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு மத்தியில் இதுபோன்று வழக்கு விசாரணையில் சிக்கியுள்ள
அந்த இரு பாஜக தலைவர்களை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தால் நிச்சயம் எதிர்க்கட்சிகள் எதிர்க்கக் கூடும் என்பதால் அந்த முயற்சியை பாஜக அரசு கைவிட்டது. தற்போது எதிர்க்கட்சிகளும் போட்டிக்கு ஒரு வேட்பாளரை நிறுத்த முயற்சிக்கின்றன.
அமிதாப் பக்கம்
அடுத்தாற்போல், பாஜக தன் பார்வையை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பக்கத்தில் திரும்பியது. எனினும் அவரது பெயர் பனாமா பேப்பரில் லீக் ஆனதால் அவருக்கும் எதிர்ப்பு வலுக்கக் கூடும் என்று அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. மேலு்ம தான் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் அனைத்து கட்சியினராலும் ஆதரிக்கப்படும் நபராக இருக்க வேண்டும் என்றும் பாஜக கருதியது.
ரஜினிகாந்துக்கு வலை
எந்த சர்ச்சையிலும் சிக்காத மனிதராக நடிகர் ரஜினி காந்த் இருப்பதால் அவரையே வேட்பாளராக அறிவிக்கலாம் என்று கருதியது. எனினும் அரசியலுக்கு வர விருப்பமில்லாத நிலைப்பாட்டை ரஜினி கடைபிடித்து வருவதால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. பின்னர் ஜார்க்கண்ட ஆளுநர் திரௌபதி முர்முவை தேர்ந்தெடுத்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையை பெறுவார். மேலும் எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவிக்காது என்று பாஜக கணக்கு போட்டது.
எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள்
ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி, சரத் யாதவ், மற்றும் சரத் பவார் ஆகியோரை வேட்பாளராக நிறுத்த ஆலோசனை நடத்தி வருகின்றன. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மொத்தம் 5,49,442 வாக்குகள் தேவை. தற்போது பாஜக கூட்டணியிடம் மொத்தமாக 5,31,954 வாக்குகள் உள்ளன. எனவே கூடுதலாக தேவைப்படும் 17,500 வாக்குகளுக்காக அதிமுக, பிஜு ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளை பாஜக குறி வைத்துள்ளது.
எத்தனை வாக்குகள்
தமிழகத்தில் மொத்தம் 176 எம்எல்ஏ-க்களும், ராஜ்யசபா, லோக்சபா ஆகிய இரண்டும் சேர்த்து 708 எம்.பி.க்கள் உள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் 122 எம்எல்ஏ-க்களும், 50 எம்.பி.க்களும் உள்ளனர். எதிர்க்கட்சியான திமுகவிடம் 97 எம்எல்ஏ-க்களும், 4 எம்.பி.க்களும் உள்ளனர். தமிழகத்தில் உள்ள 134 அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு 23,584 வாக்குகளும், அதிமுகவின் 50 எம்.பி.க்களுக்கு 35,400 வாக்குகளும் என மொத்தம் 58,984 வாக்குகள் உள்ளன.
அதிமுகவுக்கு எத்தனை
ஒரு வேளை பாஜகவுக்கு அதிமுக, பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆதரவு கிடைத்துவிட்டால் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 6,28,195 ஆகும். ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கு 5,49,442 வாக்குகளே போதுமானது. இதனால் ஜனாதிபதி தலைவர் தேர்தல் நடைபெறும் வரை எப்பாடுபட்டாவது அதிமுகவினரை மிரட்டியோ, உருட்டியோ பணிய வைப்பது என்ற நிலைப்பாட்டில் பாஜக உள்ளது. அதிமுக என்ன செய்யும்.... முரண்டுபிடித்தால் பழைய வழக்குகள் தோண்டியெடுக்கப்படும், வருமான வரி சோதனை நடத்தப்படும் என்பதுகூட தெரியாதா என்ன?