ஜூலை முதல் வாரத்தில் சென்னை வருகிறார் மீரா குமார்.. கருணாநிதி, ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கேட்பு
ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மீரா குமார், ஜூலை முதல் வாரத்தில் தமிழகம் வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
டெல்லி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் மீரா குமார், ஜூலை முதல் வாரத்தில் தமிழகம் வருகிறார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெறுகிறது.
அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் தனது வேட்புமனுவை கடந்த 23ம் தேதி தாக்கல் செய்தார்.
நாளை வேட்புமனு தாக்கல்
பாஜக அறிவித்துள்ள வேட்பாளரை எதிர்த்து. முன்னாள் லோக் சபா நாயகர் மீரா குமார், எதிர்க்கட்சிகளால் களம் இறக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. மீரா குமார் நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
நன்றி
இந்நிலையில், இன்று டெல்லியில் மீரா குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜனாதிபதி வேட்பாளராக தன்னை ஒருமனதாக தேர்வு செய்த 17 கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ஆதரவு
17 கட்சிகள் ஒருமனதாக தன்னை தேர்வு செய்துள்ளதால் அனைத்துக் கட்சிகளும் தன்னை ஆதரிக்க வேண்டும் என்று மீராகுமார் கேட்டுக் கொண்டார். மேலும், சமத்துவம், சமூக நீதியில் தனக்கு மிக அதிகமான நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழகம் வருகை
இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னை வருகை தர உள்ளார் மீரா குமார். அப்போது திமுக தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோர உள்ளார்.
இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம்
சென்னை வருகையின் போது வேற சில தலைவர்களையும் சந்தித்து மீரா குமார் ஆதரவு கோருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே போன்று இந்தியா முழுவதும் மீரா குமார் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு காங்கிரஸ் மற்றும் ஆதரவு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்கவும் திட்டமிட்டுள்ளார்.