சோனியா காந்தி, மன்மோகன் சிங் முன்னிலையில்.. வேட்புமனுவை தாக்கல் செய்தார் மீரா குமார்
ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மீரா குமார், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
டெல்லி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை எதிர்த்துப் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமார், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெறுகிறது.
அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் தனது வேட்புமனுவை கடந்த 23ம் தேதி தாக்கல் செய்தார்.
இன்று வேட்புமனு தாக்கல்
பாஜக அறிவித்துள்ள வேட்பாளரை எதிர்த்து. முன்னாள் லோக் சபா நாயகர் மீரா குமார், எதிர்க்கட்சிகளால் களம் இறக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. மீரா குமார் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
சோனியா காந்தி முன்னிலையில்..
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் முன்னிலையில் மீரா குமார் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் உடன் இருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்பு
மீரா குமாரை ஒருமனதாக தேர்வு செய்த 17 கட்சிகளின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர். சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ தலைவர் டி. ராஜா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சுற்றுப் பயணம்
இதனையடுத்து, இந்தியா முழுவதும் மீரா குமார் சுற்றுப் பயணத்தை மேற்கொள்கிறார். அப்போது, காங்கிரஸ் மற்றும் ஆதரவு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்கவும் திட்டமிட்டுள்ளார்.