நான் ஒரு பைத்தியக்காரன்.. ஜனாதிபதி தேர்தலில் கலக்கல் வேட்பு மனு!
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள ஒருவர், நான் ஒரு பைத்தியக்காரன். என்னால் 100 கையெழுத்தைக் கூட வாங்க முடியாது என்று கூறியுள்ளது கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. குட்டி குட்டி சுயேச்சைகள் மனு தாக்கல் செய்து வருகின்றனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த தேர்தல் மன்னன் கே.பத்மராஜனும் ஒருவர். சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் பத்மராஜன்.
இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள சில சுயேச்சைகளின் மனுக்கள் களேபரமாக உள்ளன. மும்பையைச் சேர்ந்த தம்பதி சாய்ரா பானு முகம்மது படேல் மற்றும் முகம்மது படேல் அவர்களில் சிலர்.
நான் ஜனாதிபதி - என் மனைவி துணை ஜனாதிபதி!
முகம்மது படேல் தனது வேட்பு மனு குறித்துக் கூறுகையில், நான் ஜனாதிபதியாகவும், எனது மனைவி துணை ஜனாதிபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களது சின்ன ஆசை என்று கூறி ஜெர்க் ஆக வைக்கின்றனர்.
தேர்தல் மன்னன் பத்மராஜன்
இன்னொரு சுவாரஸ்ய வேட்பாளர் தேர்தல் மன்னன் பத்மராஜன். ஒரு தேர்தல் கூட விடாமல் போட்டியிடுவதே இவரது வழக்கம். இதுவரை 178 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளார். எதிலுமே டெபாசிட்டைத் திரும்பப் பெற்றதில்லை.
சாதனைக்காக போட்டி
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கோனூர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மராஜன். இவர் பஞ்சர் கடை வைத்துள்ளார். அதிகமுறை தேர்தலில் போட்டியிட்டு , கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதே இவருடைய லட்சியம். இதனால் தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டு வருகிறார். மேலும் எப்போது அவர் தேர்தலில் போட்டியிட்டாலும் மக்களிடம் சென்று வாக்கு சேகரிப்பதுமில்லை.
பிரபலங்களுடன் மோதல்
பிரதமர் மோடி, மன்மோகன் சிங், நரசிம்ம ராவ், கருணாநிதி, ஜெயலலிதா , எடியூரப்பா உள்ளிட்ட பல தலைவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டுள்ளார். கின்னஸ் சாதனைக்காக தேர்தலில் போட்டியிடும் பத்மராஜன் இதுவரை 178 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். கடைசியாக இவர் ஆர்.கே.நகரில் போட்டியிட்டார்.
தேர்தல் ஆணையத்தை அலற விட்டவர்
கடந்த 1996ம் ஆண்டு , 5 மாநிலங்களில் 8 தொகுதியில் ஒரே நேரத்தில் போட்டியிட்டு பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன் காரணமாகவே, இவரால்தான் ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறையே கொண்டு வந்தது. இதேபோல சுயேச்சை வேட்பாளருக்கான டெபாசிட் தொகையும் அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தலில் தோல்வியடைந்து வரும் பத்மராஜன், அதன் காரணமாகவே லிம்கா சாதனை புத்தகத்தில் 3 முறை இடம்பிடித்தார்.
நான் பைத்தியம் பாஸ்
விஜயபிரகாஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் சுவாரஸ்யமான வாசகத்தை சேர்த்துள்ளார். அதாவது, என்னைப் போன்ற சாமானியர்களால் 100 கையெழுத்தைக் கூட வாங்க முடியாது. நான் ஒரு பைத்தியம். ஆனால் ஒவ்வொருவரும் என்னைப் போல பைத்தியமாக இருக்க வேண்டும் என்று கூறி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார் விஜயபிரகாஷ்.