அடுத்த ஜனாதிபதி யார்? எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஆலோசனை
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்து முடிவு செய்யும் தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை நடத்துகின்றன.
டெல்லி: பாஜகவுக்கு சரியான எதிர்ப்பைக் காட்டும் வகையில், சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்றத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதை முடிவு செய்யும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் கூடி ஆலோசனை செய்து வருகின்றனர். வருகிற ஜூலை மாதம் 17ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், இன்று முதல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு செய்வதில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளன.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட்டியுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் ஈடுபடுவதற்கு முன்பாக, பாஜக தலைமை ஜனாதிபதியை போட்டியின்றித் தேர்வு செய்ய சோனியா காந்தியை நேரில் சந்திக்க முடிவு செய்திருந்தது. இந்த நிலையில் சோனியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் நிறுத்தப்படுவது உறுதியாகியுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.