தமிழக எம்பி, எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்ட.. ஜூலை 1ல் சென்னை வருகிறார் ராம் நாத் கோவிந்த்
பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளரான ராம் நாத் கோவிந்த் ஜூலை 1ம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளளார்.
டெல்லி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், ஜூலை 1ம் தேதி சென்னை வந்து ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு திரட்ட உள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெறுகிறது.
அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் தனது வேட்புமனுவை கடந்த 23ம் தேதி தாக்கல் செய்தார்.
இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம்
இதனைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் அரசியல் தலைவர்களை சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்குமாறு ராம்நாத் கோவிந்த் கேட்டு வருகிறார். இன்று காஷ்மீர் சென்று ஆதரவு திரட்டியுள்ளார் ராம்நாத்.
சென்னை வருகை
இந்நிலையில், சென்னைக்கு வரும் 1ம் தேதி ராம் நாத் கோவிந்த் வர உள்ளார். அப்போது தமிழகத்தில் உள்ள ஆதரவு அரசியல் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார்.
புதுச்சேரிக்கும் பயணம்
சென்னையில் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களிடம் ஆதரவு திரட்டிய பின்னர், அங்கிருந்து புதுச்சேரி மற்றும் கேரளா செல்ல ராம் நாத் திட்டமிட்டுள்ளார். புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமியை ராம்நாத் சந்திக்க உள்ளார்.
பஞ்சாப் பயணம்
சென்னை வருவதற்கு முன்னதாக, வரும் 29ம் தேதி பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கும் ராம் நாத் சென்று எம்பி மற்றும் எம்எல்ஏக்களிடம் ஆதரவு கோருகிறார். இது தவிர ஆதரவு கட்சிகளின் தலைவர்களை தொடர்ந்து சந்திப்பது என ராம் நாத் திட்டமிட்டுள்ளார்.