பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம் நாத்தின் மாற்று வேட்பாளராக வெங்கய்ய நாயுடு.. இன்று வேட்புமனு தாக்கல்
பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளரான ராம் நாத் கோவிந்துவின் மாற்று வேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
டெல்லி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தின் மாற்று வேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெறுகிறது.
அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் தனது வேட்புமனுவை கடந்த 23ம் தேதி தாக்கல் செய்தார்.
மாற்று வேட்பாளர்
இதனைத் தொடர்ந்து, ராம் நாத் கோவிந்துவின் மாற்று வேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவராக வெங்கய்ய நாயுடு பேசப்பட்டு வந்த நிலையில் ராம் நாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று கடைசி நாள்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மீரா குமார் இன்று தனது வேட்புமனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து வெங்கய்ய நாயுடுவும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
துணை ஜனாதிபதி
துணை ஜனாதிபதி பதவிக்கு தொடக்கம் முதலே மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பெயர் அடிபட்டு வருகிறது. இந்நிலையில் அவர் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மறுப்பு
ஆனால், இதனை திட்டவட்டமாக வெங்கய்ய நாயுடு மறுத்துள்ளார். மக்களை சந்தித்து பணி செய்வதே தனக்கு விரும்பம் என்று வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் இன்று ஜனாதிபதி வேட்பாளர் ராம் நாத்திற்கு மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.