'டாடா சன்ஸ்' அடுத்த தலைவர் யார்?... பட்டியலில் "பெப்ஸி" இந்திரா நூயி, "டிசிஎஸ்" சந்திரசேகரன்
மும்பை: டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டுள்ள நிலையில் அப்பொறுப்புக்கு பெப்ஸியின் இந்திரா நூயி, டிசிஎஸ் சந்திரசேகரன் உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபடுகின்றன.
டாடா குழுமத்தின் தலைவராக 4 ஆண்டுகாலம் பதவி வகித்தவர் சைரஸ் மிஸ்திரி. அவர் நேற்று நடைபெற்ற போர்டு மீட்டிங்கில் திடீரென நீக்கப்பட்டார்.
டாடா குழுமத்தின் இடைக்கால தலைவராக ரத்தன் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையிலான குழு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்.
புதிய தலைவர் பதவிக்கு பெப்ஸி நிறுவனத்தின் இந்திரா நூயி. வோடஃபோன் முன்னாள் சிஇஓ அருண் சரின், டாடா இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நோயல் டாடா, டிசிஎஸ் சிஇஓ சந்திரசேகரன், டாடா குழுமத்தின் இஷாத் ஹூசைன், பி முத்துராமன் உள்ளிட்டோர் பெயர்கள் அடிபடுகின்றன.
இவர்களில் நோயல் டாடா, அருண் சரின் ஆகியோருக்கு இம்முறையும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என்கின்றன டாடா குழுமத்தின் ஒரு தரப்பு. ஆனால் ரத்தன் டாடா வட்டாரங்களோ, நோயல் டாடா அல்லது இந்திரா நூயி ஆகியோருக்கே அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றன.
நோயல் டாடாவைப் பொறுத்தவரை டாடா குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்திரா நூயி தம்முடைய நிர்வாக திறமையால் ரத்தன் டாடாவை ஈர்த்தவர் என்று இதற்கு காரணங்களும் முன்வைக்கப்படுகின்றன.
இருப்பினும் டாடா குடும்பத்தைச் சேர்ந்த நோயல் டாடாவுக்கு வாய்ப்பு கூடுதலாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.