துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கய்யா நாயுடு பெயர் பரிந்துரை?
துணை ஜனாதிபதி பதவிக்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவின் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி: துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அந்த பதவிக்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவின் பெயரை பரிந்துரைக்க பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி ஆகியோரது பதவிக் காலம் விரைவில் நிறைவடைய உள்ளது.
தற்போது பாஜகவுக்கு பெரும்பாலான உறுப்பினர்கள் இருப்பதால் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல்களில் அக்கட்சி முன்னிறுத்தும் வேட்பாளர்களுக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் அப்பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றன. பாஜக சார்பில் தற்போதைய ஜார்க்கண்ட் ஆளுநரும் பழங்குடியினத் தலைவருமான திரௌபதி முர்மு, ஒடிசா மாநில கவர்னரான செனாயன்பா சுபடோஷி ஜமீ, ஆந்திரா கவர்னர் நரசிம்மன், பாஜக மூத்த தலைவர் ஹுக்கும் தேவ் நாராயண் யாதவ் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுபெயரையும் அக்கட்சி ஆலோசித்து வருகிறது.
தற்போது ஆந்திர மாநில ஆளுநராக இருக்கும் நரசிம்மன் ஐக்கிய முற்போக்கு அரசால் 2010 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். மோடி அரசு பதவி ஏற்றப்போதும் தொடர்ந்து அவரே அப்பதவில் தற்போது வரை நீடித்து வருகிறார். மத்திய அரசுக்கு இணக்கமாகவே உள்ளதால் அவரையும் வேட்பாளராக நிறுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ..