அடுத்த துணை ஜனாதிபதி யார்… ஹுகும்தேவ் யாதவா… வெங்கய்ய நாயுடுவா… போட்டியில் வெல்லப் போவது யார்?
தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் வரும் ஆகஸ்டு மாதம் நிறைவடைகிறது. அந்த இடத்திற்கு ஹுகும்தேவ் யாதவ் மற்றும் வெங்கய்ய நாயுடுவின் பெயர் அடிபடுகிறது.
டெல்லி: துணை ஜனாதிபதியாக அடுத்து யார் வருவார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதற்காக பல பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தப் பந்தயத்தில் முதலில் அடிபடும் பெயர் ஹுகும்தேவ் யாதவ். மேலும், வெங்கய்ய நாயுடு மற்றும் எஸ்.சி. ஜமீர் உள்ளிட்ட பெயர்களும் அடிப்படுகின்றன.
இரண்டு முறை துணை ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் வரும் ஆகஸ்டு மாதம் நிறைவடைகிறது. இவருக்கு மூன்றாவது முறையாக துணை ஜனாதிபதி பதவியை நீடிக்க பாஜக விரும்பவில்லை.
இதனால் அடுத்த துணை ஜனாதிபதிக்கான வேட்பாளரை தேடும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் இருப்பது ஹுகும்தேவ் யாதவ்தான். அடுத்ததாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, எஸ்.சி. ஜமீர், இ.எஸ்.எல். நரசிம்மன் ஆகியோரின் பெயரும் பரிசீலனையில் உள்ளது. அவர்கள் யார்?
ஹூகும்தேவ் நாராயணன்
ஹூகும்தேவ் நாராயணன் யாதவ், பீகார் மாநிலத்தின் மதுபானி தொகுதியின் பாஜக எம்.பி.யாவார். வாய்பாய் பிரதமராக இருந்த போது வேளாண்மை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக பணியாற்றியவர். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதாலும், பிற்படுத்தப்பட்டோரின் பலமான வாக்கு வங்கியாகவும் இவரைக் கருதும் பாஜக, ஹூகும்தேவ் நாராயணன் யாதவை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முனைப்பு காட்டி வருகிறது. பிரதமர் மோடியால் பல முறை பாராட்டப்பட்ட இவர், 1993ம் ஆண்டு பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார்.
வெங்கய்ய நாயுடு
மத்திய அமைச்சராக உள்ள வெங்கய்ய நாயுடுவின் பெயர் துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு உறுதியாக பேசப்படவில்லை என்றாலும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானவில் பாஜகவை நிலை நிறுத்த இவருக்கு துணை துணை ஜனாதிபதி பதவி வழங்கலாம் என்று பாஜகவில் பேசப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலத்திற்கு அடுத்தபடியாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள்தான் பாஜக கால் பாதிக்க துடிக்கும் இடங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.சி. ஜமீர்
செனாயன்பா சுபடோஷி ஜமீர் என்று அழைக்கப்படும் எஸ்.சி. ஜமீர் தற்போது ஒடிஷா மாநிலத்தின் ஆளுநராக உள்ளார். பிரபலமான காங்கிரஸ் தலைவரான ஜமீர், மகாராஷ்டிரா, கோவா மாநில ஆளுநராகவும், நாகலாந்து மாநில முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். 1961-ம் ஆண்டு எம்.பி.யாக பணியாற்றியுள்ளார். ஜவஹர்லால் நேருவால் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டவர். துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த பாஜகவிற்கு விரும்பம் இல்லை என்றாலும், சிறுபான்மையினர் நலவிரும்பி என்று சொல்லிக் கொள்வதற்காக இவரை வேட்பாளராக்கலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இ.எஸ்.எல். நரசிம்மன்
மன்மோகன் பிரதமராக இருந்த போது, நரசிம்மன் ஆந்திரப் பிரதேச மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டவர். மோடி அரசு பொறுப்பேற்ற பின்னர், காங்கிரஸ் அரசு நியமித்த பல ஆளுநர்கள் மாற்றப்பட்டார்கள். அதில் இருந்து தப்பியவர்களில் இ.எஸ்.எல் நரசிம்மனும் ஒருவர். தெலுங்கனா பிரிந்த பின்னர், அம்மாநிலத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்பை வகித்து வருகிறார். சிபிஐயின் இயக்குநராக 2006ம் ஆண்டு வரை இருந்துள்ளார். 2007 முதல் 2010 வரை சட்டீஸ்கர் மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பேற்று பணியாற்றினார். 1968ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் இருந்து ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர். 1981 முதல் 1984 வரை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தின் முதல் செயலாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.