கோழிக்கோட்டில் ஃபீஃபா ஸ்பெஷல் உணவுத் திருவிழா: நேமார் மீன், மெஸ்ஸி பீட்சா சாப்பிட்டீங்களா?
கோழிக்கோடு: கோழிக்கோட்டில் உள்ள தாஜ் கேட்வே ஹோட்டலில் நடக்கும் உணவு திருவிழாவில் ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளையொட்டி உணவு வகைகளுக்கு வீரர்களின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பிரேசிலில் நடந்து வருகின்றன. உலக மக்களுக்கு கால்பந்து காய்ச்சல் பிடித்துள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தாஜ் கேட்வே ஹோட்டலில் உலகக் கோப்பையை கொண்டாடும் விதமாக உணவுத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த ஹோட்டலில் வழங்கப்படும் உணவு வகைகளுக்கு உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடும் வீரர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஹோட்டலில் டோர்னடோ ரொனால்டோ, ஃபேரி நேமார் மீன், ஃபஜிதா ரேய்ஸ், மெஸ்ஸி பீட்சா, க்ரீன் பெப்பர் க்ரஸ்டட் பார்வர்டு பிங்கர்ஸ் மற்றும் பல உணவு வகைகளுக்கு வீரர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இது தவிர சிறப்பு ஃபுஃபே இரவு விருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரவு விருந்தை சுவைக்க ஒருவர் ரூ.1000 செலுத்த வேண்டும். அவர்களுக்கு அளவே இல்லாமல் மாக்டெய்ல்கள் அதாவது கூல்ட்ரிங்க்ஸ் வழங்கப்படும். மேலும் கால்பந்தாட்ட ரசிகர்கள் போட்டிகளை கண்டு ரசிக்க, உணவு வகைகளை ருசிக்க ஹோட்டல் இரவு 7 மணி முதல் 11 மணி வரை திறந்திருக்கும்.