ஆண்டுக்கு ரூ.10,000 கோடி நிதி... என்.ஜி.ஓ. பணம் குவிவதில் டெல்லி முதலிடம்!: 2வது இடத்தில் தமிழ்நாடு!
டெல்லி: நாட்டிலேயே டெல்லியில் உள்ள என்.ஜி.ஓக்களுக்குத்தான் வெளிநாட்டு நிதி அதிக அளவில் கிடைப்பதாகவும் அதற்கு அடுத்து தமிழக நிறுவனங்களுக்குத்தான் பணம் கிடைப்பதாகவும் சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் உளவு அமைப்பான ஐ.பி, பிரதமர் அலுவலகத்துக்கு என்.ஜி.ஓ.க்களின் செயல்பாடுகள் குறித்து ஒரு அறிக்கை அனுப்பியிருந்தது. அதில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த உதயகுமார் பெயரைக் குறிப்பிட்டு அமெரிக்காவிடம் இருந்து அவர் பணம் பெற்றதாக குற்றம்சாட்டியிருந்தது.
இதைத் தொடர்ந்து என்.ஜி.ஓக்களின் செயல்பாடுகள் குறித்து நாடு தழுவிய விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ரூ10 ஆயிரம் கோடி
2009-09ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள 23,172 என்.ஜி.ஓக்கள் ரூ10, 997.35 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றுள்ளனர். இதேபோல் 2009-10ஆம் ஆண்டில் 22,275 என்.ஜி.ஓக்கள் ரூ10,431.12 கோடி, 2010-11ஆம் ஆண்டில் 22,735 என்.ஜி.ஓக்கள் ரூ10,334.12 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றிருக்கின்றன.
என்.ஜி.ஓக்கள் நிதியில் டெல்லி முதலிடம்
இப்படி வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் டெல்லி முதலிடத்தில் இருக்கிறது. ஆண்டுக்கு மொத்தம் 1815.91 கோடியை வாங்குக் குவிக்கின்றன டெல்லி என்.ஜி.ஓக்கள்.
2வது இடத்தில் தமிழகம்
தமிழகத்து என்.ஜி.ஓக்கள் ரூ1663.31 கோடியை வாங்கிக் குவித்து 2வது இடத்தில் இருக்கின்றன.
3வது இடத்தில் ஆந்திரா
இதற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருப்பது ஆந்திரா. இம்மாநில என்.ஜி.ஓக்கள் மொத்தம் ரூ1324.87 கோடி நிதியை வாங்குகிறது.
அமெரிக்காதான் டாப்
இப்படி என்.ஜி.ஓக்களுக்கு பணம் கொடுப்பதில் அமெரிக்காதான் முதலிடம் வகிக்கிறது. ஆண்டுக்கு ரூ3105.73 கோடி நிதி கொடுக்கிறது அமெரிக்கா. 2வது இடத்தில் இருப்பது ஜெர்மனி. 3வது இடத்தில் இருக்கிறது இங்கிலாந்து.
அமெரிக்க நிறுவனம்..
அமெரிக்காவின் கோஸ்பெல் ஃபார் ஆசியா என்ற நிறுவனம் அதிக நிதி அளிக்கிறது. ஆண்டுக்கு மொத்தம் ரூ232.71 கோடி நிதி கொடுக்கிறது. 2வது இடத்தில் ஸ்பெயினின் விசென்ட் பெர்ரெர் நிறுவனமும் 3வது இடத்தில் வோல்ர்டு விஷன் குளோபல் சென்டரும் அதிக நிதி கொடுக்கக் கூடியவைகளாக இருக்கின்றன.
சிறுபான்மையினர் அமைப்புகள்
இப்போது நாடு முழுவதும் முக்கிய அமைப்புகளுக்கான வெளிநாட்டு நிதி குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் என்.ஜி.ஓக்களும் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.