டெல்லியில் இனி குப்பையை எரித்தால் “ஆப்பு”தான் -பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
டெல்லி: டெல்லியில் இனி திறந்த வெளியில் குப்பை, இலை, பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் கொளுத்தினால் ரூபாய் 5000 அபராதம் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் மாசடைந்து வரும் நிலையில், பசுமை தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன், 10 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டடீசல் வாகனங்களுக்கு தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
முழுமையான தடை:
டென்மார்க், பிரேசில், சீனா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகில் உள்ள பல நாடுகள் டீசல் வாகனங்களுக்கு முழுமையாகத் தடை விதித்துள்ளன.
வாகனப் பயன்பாடு குறைவு:
மேலும், பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு தடை விதிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அல்லது அதிக வரிகளை விதிப்பதன் மூலம் டீசல் வாகனப் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. டீசல் வாகனங்கள் வெளியேற்றும் புகையைச் சுவாசித்து அதன் மூலம் மக்கள் நோய்களுக்கு ஆட்பட்டுவிடக் கூடாது.
10 ஆண்டுகளுக்கு மேல்:
அந்த நிலை ஏற்படாதவாறு அதுதொடர்பான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு ஏற்கனவே உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது, கனரக வாகனமோ அல்லது இலகு ரக வாகனமோ எதுவானாலும் 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்கள் டெல்லி சாலைகளில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமல்படுத்த தாமதம்:
முன்னதாக 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்கள் டெல்லி சாலைகளில் பயணிக்க தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
திறந்த வெளியில் நோ குப்பை:
தற்போது மேலும் ஒரு அதிரடி உத்தரவை பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ளது. டெல்லி மாநிலம் மற்றும் தேசிய தலைநகர பகுதிகளில் திறந்த வெளியில் குப்பை, இலை, பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் ஆகியவற்றை தீ வைத்து எரித்தால் ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் என்று பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.