உ.பி.யில் குழந்தைகள் பலி- தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
லக்னோ: கோரப்பூரில் அடுத்தடுத்து 70 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு அந்த உத்தரபிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 5 நாட்களில் அடுத்தடுத்து 70 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து பல முறை மருத்துவர்கள் நினைவுப்படுத்தியும் அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் இந்த விபரீதம் நடத்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
மூளைக்காய்ச்சல் நோயால் கடந்த 30 ஆண்டுகளில் கிழக்கு உத்தரபிரதேசத்தில் மட்டுமே 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக கோரக்பூர் மாவட்டத்தில் தான் இந்த உயிரிழப்புகள் அதிக அளவில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
எனவே இதுவரை செய்யப்பட்டுள்ள மருத்துவவசதிகள் குறித்தும் தற்போது 70 குழந்தைகள் உயிரிழந்தது குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரபிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமைகள் நோட்டீஸை அனுப்பியுள்ளது.