பெங்களூர் சிறை கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டது ஏன்? டிஜிபிக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து 32 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு கர்நாடக டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் சசிகலாவுக்கு செய்து கொடுக்கப்பட்ட சிறப்பு வசதிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் டிஐஜி ரூபா.
சசிகலா தரப்பிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு, சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் அவருக்கு சிறப்புச் சலுகை காட்டி வருவதாக டிஐஜி ரூபா கடந்த புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்தார். அவரது அறிக்கை தமிழக, கர்நாடக அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரூபாவை கர்நாடக அரசு அதிரடியாக இடமாற்றம் செய்தது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 32 கைதிகள் தர்ணாவில் ஈடுபட்டதாகவும், அவர்களை இரவோடு இரவாக வேறு சிறைகளுக்கு மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நடைபெறும் ஊழல் தொடர்பாக உயரதிகாரிகளுக்கு எதிராக சில கைதிகள் வாக்குமூலம் அளிக்கத் தயாராக இருந்ததாலேயே இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக கர்நாடக டி.ஜி.பி.க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் சிறைத்துறை ஐ.ஜி.யும் பதிலளிக்க வேண்டும், அதுமட்டுமல்லாமல் தர்ணாவில் ஈடுபட்ட 32 கைதிகள் ஒரே இரவில் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டது பற்றியும் விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.