சசிகலா இருக்கும் பெங்களூரு சிறையில் 32 கைதிகள் மீது தாக்குதலா.. மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
சசிகலா இருக்கும் பரப்பன அக்ரஹார சிறையில் 32 கைதிகள் கடுமையாக தாக்கப்பட்டார்களா? என்று விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கர்நாடக சிறைத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பெங்களூரு: பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து 32 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டது குறித்தும் அவர்கள் தாக்கப்பட்டது குறித்தும் விளக்கம் கேட்டு கர்நாடக டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர், சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறையில் கொடுக்கப்பட்ட சிறப்பு சலுகை மற்றும் வசதிகளை ஆய்வு செய்து வெளிச்சத்துக்கு வந்தார் டிஐஜி ரூபா.
இது குறித்து ரூபா அளித்த புகாரில், ' சசிகலா தரப்பிடமிருந்து ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக் கொண்டு, சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் அவருக்கு சிறப்புச் சலுகை காட்டி வருவதாக தெரிவித்து இருந்தார். இது தமிழகம், கர்நாடக மாநிலங்களைத் தாண்டி தேசிய அளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இடமாற்றம்
இதையடுத்து டிஐஜி ரூபாவை கர்நாடக அரசு அதிரடியாக இடமாற்றம் செய்தது. சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயணராவ் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். கர்நாடக அரசின் இந்த திடீர் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கைதிகள் தர்ணா
இதனிடையே பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில், சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 32 கைதிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை இரவோடு இரவாக வேறு சிறைகளுக்கு மாற்றியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
என்எச்ஆர்சி நோட்டீஸ்
பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் நடைபெறும் ஊழல் முறைகேடுகள், லஞ்சம் குறித்து, உயரதிகாரிகளுக்கு எதிராக கைதிகள் சிலர் வாக்குமூலம் அளிக்கத் தயாராக இருந்ததாலேயே இந்த அதிரடி மாற்றம் நடைபெற்றுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இதுதொடர்பாக கர்நாடக டி.ஜி.பி., ,மற்றும் ஐ.ஜி.க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கைதிகள் தாக்கப்பட்டார்களா?
அதில், பெங்களூரு சிறையில் உண்மையில் என்ன நடந்தது, 32 கைதிகள் தாக்கப்பட்ட நிலையில் சிறை மாற்றம் செய்யப்பட்டார்களா? என்பது குறித்து 4 வார காலத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.