வனவிலங்குகள் தாக்கியதில் பொதுமக்கள் உயிரிழப்பு: அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ்
டெல்லி: நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் தாக்கியதில் பொதுமக்கள் உயிரிழந்தது தொடர்பாக தமிழக அரசு 8 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
நீலகிரி மாவட்டத்தில் யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்குவது தொடர் நிகழ்வாகி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் புலி தாக்கியதில் 6 பேரும், யானை தாக்கியதில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் பொதுமக்கள் அச்சம் கொள்ளாத வகையில் எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கையை அரசும், நீலகிரி மாவட்ட நிர்வாகம், எடுத்துள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து 8 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என மனித உரிமை ஆணையம் நோட்டீசில் குறிப்பிட்டுள்ளது.