குடியிருப்பு பகுதிகளில் செல்போன் டவர்: மத்திய அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
டெல்லி: நெருக்கமான குடியிருப்பு பகுதிகளில் செல்போன் டவர்கள் மனிதர்களின் உடல்நலனுக்குக் கேடு விளைவிக்கும் கதிர்வீச்சுகளை வெளியிடுவதாக வந்துள்ள புகார் குறித்து இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தொலைத் தொடர்பு மற்றும் சுகாதார அமைச்சகங்களுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிட்டுக் குருவிகளின் அழிவுக்கு செல்போன் டவர்களில் வெளியாகும் கதிர்வீச்சுகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இன்று நகரங்களில் மட்டுமல்ல, சில கிராமங்களிலும் பறவைகளைப் பார்ப்பது அரிதிலும் அரிதாகி விட்டது. அப்படித் தான் சிட்டுக் குருவி உலகளவில் அழிந்து அரிய வகை பறவை இனங்களில் சேர்ந்து விட்டது என பறவைகள் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் சக்தி மிகுந்த கதிர்வீச்சால் மனிதர்களின் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே இதுகுறித்து விளக்கம் கேட்டு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது
இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தற்போது இந்த தொழில்நுட்பம் அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்துள்ளதால் இன்றைய தலைமுறையினர் செல்பேசி கோபுரங்கள், டிஜிடல் கேபிள்கள், செல்பேசிகள் ஆகியவற்றின் மத்தியில் வாழ்கின்றனர். இந்த நிலைமையில் இப்புகார் உண்மையாக இருந்தால் மனிதர்களின் வாழ்வுக்கான உரிமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கோபுரங்கள் வெளியிடும் கதிர்வீச்சு மனிதர்களை, குறிப்பாக நோயாளிகள், குழந்தைகள், முதியோர், கரு ஆகியோரது உடல்நலனுக்கு ஆபத்தை விளைவிக்கும்.பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு 500 மீட்டர் சுற்றளவில் செல்பேசி கோபுரங்கள் அமைக்கப்படவில்லை என்று உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 21 அன்று அரசு ஆணை வெளியிடப்பட்டது.
ஆனால் இது மனிதர்கள் வாழும் வீடுகளை குறிப்பிடவில்லை என்பதால் சரியானதல்ல. இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு செல்பேசி நிறுவனங்கள் நெறுக்கமான குடியிருப்பு பகுதிகளில் செல்பேசி கோபுரங்களை அமைத்து வருகின்றன என்று புகார்தாரர் தெரிவிக்கிறார். தற்போது 3ஜி, 4ஜி தொழில்நுட்பங்கள் பெருகிவிட்டதால் கதிர்வீச்சு அதிகரிக்கும். கடந்த வருடம் மே 31 வரை ரூபாய்
10.80 கோடி அபராதம் செல்பேசி நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்நிறுவனங்கள் கதீர்வீச்சுக்களுக்கான பாதுகாப்பு பகுதியை அவ்வப்போது மீறி இருப்பது நிரூபணம் ஆகிறது. இத்துடன் மின் தடையில் செயல்பட முறையில்லாமல் அமைக்கப்பட்ட டீசல் ஜெனரேட்டர்களாலும் சுற்றுச்சூழல் மாசுபடுவது குறிப்பிட்டத்தக்கது. எனவே இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.