ஹெச்.ஐ.வி நோய்க்கான மருந்துகள் பற்றாக்குறை- விளக்கம் கேட்டு சுகாதாரத்துறைக்கு நோட்டீஸ்!
டெல்லி: ஹெச்.ஐ.வி நோய்க்கான மருந்துகளின் பற்றாக்குறைக்கு காரணம் கேட்டு மத்திய சுகாதாரத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.
ஹெச்.ஐ.வி நோயாளிகளுக்கான மருந்துகள் பற்றாக்குறையை தீர்க்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத் துறைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையமான என்.எச்.ஆர்.சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுதொடர்பாக பத்தி ரிகைகளில் வெளியான செய்தியையே மனுவாக ஏற்றுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டெல்லி மற்றும் மும்பை உட்பட பல நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஹெச்.ஐ.வி நோயாளிகளின் உயிர்காக்க உதவும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
குறிப்பாக 355 மையங்களில் இந்த நிலைமை உள்ளது தெரிய வந்துள்ளது. பத்திரிகைகளில் வெளியாகி உள்ள இந்தச் செய்தி உண்மையெனில் அது ஹெச்.ஐ.வி நோயாளிகள் விஷயத்தில் மிகக் கடுமையான மனித உரிமை மீறலாகும்.
எனவே மருந்துகள் பற்றாக்குறையை தீர்க்க குறுகிய கால அளவிலும் நீண்டகால அளவிலும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பட்டு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.