ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு... கொச்சியில் 25 வயது இளைஞர் கைது!
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் கொச்சியில் 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொச்சி : தேசிய புலனாய்வு அமைப்பு முன் விசாரணைக்கு ஆஜரான 25 வயது இளைஞர் பாசில் ஷிகாப்பிற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவாக சிலர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருவதை தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதன்படி ஆலப்புழாவை சேர்ந்த 25 வயது இளைஞர் பாசில் ஷாகிப்பிற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக என்ஐஏ சந்தேகித்தது.
ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவான கருத்துகளை முகநூலில் பாசில் பதிவிட்டிருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து பாசில் இன்று கொச்சியில் என்ஐஏ அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரான போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வீட்டில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் துண்டுப் பிரச்சார சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் பாசிலிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், டிவிடிகளிலும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினருடனான தொடர்பு அம்பலமாகியுள்ளது.
பாசிலுக்கும் கேரளாவைச் சேர்ந்த ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்த அப்துல் ரஷிதுடன் தொடர்பு இருப்பதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். கன்னூரை சேர்ந்த ஷாஜகான் டெல்லியில் கைது செய்யப்பட்டதையடுத்து பாசிலும் என்ஐஏ கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கொச்சியில் கடந்த ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கோவை, சென்னை, நெல்லை பகுதிகளை சேர்ந்தவர்களும் இருப்பதாக கூறப்பட்ட நிலையில். இதற்கான ஆதாரம் திரட்டும் போது பாசில் சிக்கியதாகத் தெரிகிறது. மேலும் முகநூல், வாட்ஸ் அப், டுவிட்டரில் ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த கோவையைச் சேர்ந்த 2 இளைஞர்களிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.