ஹைதராபாத்தில் தீவிரவாதிகள் கைது: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் ஹைதராபாத்தின் பல்வேறு இடங்களில் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள், செல்போன், லேப்டாப்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் 5 பேர் நேரடியாக ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது என்பது தெரியவந்தது. அவர்கள் நாட்டின் பல இடங்களில் மத கலவரத்தை தூண்டிவிட்டு ஆன்மீக வழிபாட்டு தளங்களிலும் வணிக வளாகங்களில் குண்டு வைக்க திட்டமிட்டு இருந்தது விசாரனையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளை என்ஐஏ அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓரிரு நாட்களில் கோயில்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிக அளவில் கூடும் முக்கிய இடங்களில் நாசவேலையில் ஈடுபட இவர்கள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, திருப்பதி ஏழு மலையான் கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், காளஹஸ்தி சிவன் கோயில், கானிப்பாக்கம் வரசித்தி சுயம்பு விநாயகர் கோயில் உள்ளிட்ட ஆந்திராவில் உள்ள முக்கிய கோயில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் அனைத்து வாகனங் களும் அலிபிரி சோதனைச் சாவடி அருகே மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலமும் ஸ்கேனர்கள் மூலமும் மும்முரமாக தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன.
மலைப்பாதை முழுவதும் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருமலையில் பக்தர்கள் தங்கும் விடுதிகள், தலைமுடி காணிக்கை செலுத்தும் இடம், வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் மற்றும் விஐபிக்கள் தங்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதப் படை போலீஸார், ஆக்டோபஸ் கமாண்டோ படையினர் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்தி ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பதி நகரிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெடி மருந்துகள், பாரீஸ் மற்றும் பிரசல்ஸ் நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களின்போது பயன்படுத்தப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக தீவிரவாதிகளின் வசமிருந்து இந்த வகை வெடிபொருள் கைப்பற்றப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிபொருளைத் தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருளான அசிடோன், ஹைட்ரஜன் பெராக்சைட் கந்தக அமிலம் ஆகியவற்றை முகமது இப்ராஹிம் எஸ்தானி என்ற தீவிரவாதி ஏற்கெனவே வாங்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனால், இந்தியாவின் முக்கிய பகுதிகளில் இவர்கள் அதிபயங்கரமான தாக்குதலுக்கு திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.