மணிப்பூர் தனிநாடு கோரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் 18 பேருக்கு சிறைதண்டனை
இம்பால்: மணிப்பூர் தனிநாடு கோரும் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் ஆர்.கே. மேகென் என்ற சனயாய்மாவுக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சியின் சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. அத்துடன் அந்த இயக்கத்தின் மூத்த தலைவர்கள் 17 பேருக்கு 7 முதல் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
நாடு விடுதலை அடைந்த போது மணிப்பூர் இந்தியாவுடன் இணைக்கப்படவில்லை. 1949-ம் ஆம் ஆண்டு மணிப்பூர் மகாராஜாவும் அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரலும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுடன் அப்பகுதி இணைந்தது.
ஆனால் இதற்கு மணிப்பூரில் எதிர்ப்பும் கிளம்பியது. இந்தியாவின் ஆட்சிக்கு எதிராக 1964-ம் ஆண்டு யு.என்.எல்.எஃப் என்ற பிரிவினைவாத இயக்கம் உருவானது. மணிப்பூர் சுதந்திரமான சோசலிச தனிநாடாக உருவாக வேண்டும் என்பது இதன் கொள்கை.
1990களில் இந்த அமைப்பு ஆயுதம் ஏந்தி போராடத் தொடங்கியது. இதற்காக மணிப்பூர் மக்கள் ராணுவம் என்ற ஆயுத இயக்கத்தைக் கட்டமைத்தது. இதனால் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. 2010-ம் ஆண்டு வங்கதேசத்தில் பதுங்கியிருந்தபோது யு.என்.எல்.எப். தலைவர் ஆர்.கே. மேகென் என்ற சனயாய்மா கைது செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவர் மீது இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்த குற்றச்சாட்டுகளின் கீழ் தேசிய புலனாய்வு ஏஜென்சி வழக்குப் பதிவு செய்து. மேலும் யு.என்.எல்.எஃப் இயக்கத்தின் 17 மூத்த தலைவர்களும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்குகள் அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு நேற்று தீர்ப்பளிக்கப்பட்டன.
இதில் ஆர்.கே. மேகென் என்ற சனயாய்மாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி பட்டாச்சார்யா தீர்ப்பளித்தார். எஞ்சிய 17 தலைவர்களுக்கும் 7 முதல் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கோரி நீண்டகாலமாக போராடி வரும் இயக்கம் இதுதான். அப்படி போராடுகிற இயக்கங்களின் தலைவர்கள் தண்டிக்கப்படுவதும் இதுதான் முதல்முறையாகும்.