ஹைதராபாத் ஐஎஸ் தீவிரவாதி மீது என்.ஐ.ஏ. வழக்குப் பதிவு... நாச வேலைக்கு திட்டமிட்டிருந்தது அம்பலம்
ஹைதராபாத்தில் சிக்கிய ஐஎஸ் தீவிரவாதி மீது தேசிய புலனாய்வு அமைப்பு பல்வேறு கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பிடிபட்ட ஐஎஸ் தீவிரவாதி இந்திய அளவில் மிகப் பெரிய நாசகார தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக, தேசிய புலனாய்வு அமைப்பு கூறியுள்ளது. இந்த விவகாரம் இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகமது இர்ஃபான் என்ற இளைஞர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முகமது இர்ஃபானுடன், மேலும் 8 பேரையும் குற்றவாளிகளாக சந்தேகித்து அவர்கள் மீதும் கண்காணிப்பை தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிகரித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி, பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த முயற்சித்த குற்றச்சாட்டில், ஐஎஸ் தீவிரவாதி முகமது இர்ஃபானை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், முசாபர் ஹூசைன் ரிஸ்வான் என்பவருடன் சேர்ந்து, பாதுகாப்பாகப் பதுங்கியிருந்து தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகக் கூறியிருந்தார்.
மேலும், முகமது இப்ராஹிம் யஸ்தானி என்பவரின் ஆலோசனைப்படி, இர்பான் மற்றும் முகமது இலியாஸ் ஆகியோர் இணைந்து, நால்கொண்டா மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் வெடிபொருட்களைப் பரிமாற்றம் செய்துள்ளனர்.
இது மட்டுமின்றி, அனந்தபுர் சென்று, வெடிபொருட்களை வாங்கும் பணிகளையும் இர்ஃபான் செய்துள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.