பதன்கோட் தீவிரவாத தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரிக்கும்
டெல்லி: பதன்கோட் தீவிரவாத தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த உள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்திற்குள் சனிக்கிழமை அதிகாலை புகுந்த 5 தீவிரவாதிகள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிளால் கண்மூடித்தனமாக சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டனர்.
சுமார் 5 மணிநேரம் நடந்த இந்த தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். இந்நிலையில் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாதுகாப்பு படையைச் சேர்ந்த 4 பேர் இன்று சிகிச்சை பலனில்லாமல் உயிர் இழந்தனர்.
சம்பவ இடத்தை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். இந்நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த உள்ளது. இந்த விசாரணையில் பஞ்சாப் போலீசார் மற்றும் மத்திய உளவுத் துறையின் உதவியை தேசிய புலனாய்வு ஏஜென்சி நாட உள்ளது.
உத்தம்பூர் தீவிரவாத தாக்குதலைப் போன்று தான் பதன்கோட்டிலும் நடந்துள்ளது. அதனால் உத்தம்பூர் தாக்குதல் பற்றி விசாரிக்கும் தேசிய புலனாய்வு ஏஜென்சி பதன்கோட் தாக்குதல் குறித்தும் விசாரிப்பது சரியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
குர்தாஸ்பூர் தாக்குதல் குறித்து விசாரித்து வரும் பஞ்சாப் போலீசாரிடம் இருந்து சில தகவல்கள் பெறப்படும் என தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
உத்தம்பூரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் போலீசாரிடம் சிக்கிய முகமது நவீதிடம் விசாரிக்கப்படும். அவரிடம் இருந்து சில தகவல்களை பெறலாம். அவரும் பாகிஸ்தானின் பவால்பூரில் இருந்து தான் வந்துள்ளார் என்றார்.
குர்தாஸ்பூரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எந்த வழியாக ஊடுருவினார்கள் என்பது இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.