2 இந்திய மீனவர்கள் கொலை: இத்தாலி கடற்படை வீரர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க பரிந்துரை
டெல்லி: கேரள கடற்பரப்பில் 2 இந்திய மீனவர்களை படுகொலை செய்த இத்தா கடற்படை வீரர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க தேசிய புலனாய்வு அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
கேரள கடற்பகுதியில் நின்று கொண்டிருந்த இத்தாலி நாட்டு சரக்கு கப்பலில் இருந்த 2 இத்தாலி கடற்படை வீரர்கள் கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 2 மீனவர்களை கடற் கொள்ளையர்கள் என்று கருதி சுட்டுக் கொன்றனர்.
இந்த கொலை வழக்கில் குற்றம் சட்டப்பட்டவர்கள் நீதிமன்ற அனுமதியுடன் இத்தாலி சென்றனர். பின்னர் இந்தியா திரும்ப மாட்டார்கள் என அந்நாட்டு அரசு அறிவித்தது.
இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டிப்பை அடுத்து அவர்கள் இந்தியா கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படாது என்று உறுதி அளித்து, பின்னர் வெளியுறுவுத் துறை அமைச்சகம் அவர்களை இந்தியா கொண்டு வந்தது.
2 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தேசிய புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. சம்பவத்தை நேரில் பார்த்த இத்தாலி சாட்சிகள் 4 பேரை இந்தியாவுக்கு அனுப்ப இத்தாலி மறுத்து விட்டது.
பின்னர் இத்தாலி சாட்சிகள் 4 பேர் ரோம் நகரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் டெல்லியில் இருந்து கொண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் வீடியோ கான்பரன்ஸ் வழியாக விசாரணை நடத்தினார்கள்.
தற்போது வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு குழு அவர்களுக்கு தூக்கு தண்டனையை வழங்க பரிந்துரைத்துள்ளது. விசாரணை நடத்திய புலனாய்வு பிரிவு இத்தாலி கடற்படை வீரர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.