பதன்கோட் தாக்குதலுக்கு உடந்தை? 'சந்தேக' எஸ்.பி. சல்வீந்தர்சிங் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிரடி ரெய்டு!!
டெல்லி: பதன்கோட் பயங்கரவாத தாக்குதலுக்கு உடந்தையாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படும் போலீஸ் எஸ்.பி. சல்வீந்தர்சிங்கின் வீடுகள், அலுலகங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
பஞ்சாப் மாநிலத்தின் பதன்கோட் விமானப்படை தளத்தில் கடந்த 2-ந் தேதி பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி ஊடுருவிய தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ஈடுபட்ட 6 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இம்மோதலில் 7 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், குர்தாஸ்பூர் போலீஸ் எஸ்.பி. சல்வீந்தர்சிங்கை கடத்திச் சென்று அவரது வாகனம் மூலமே பதன்கோட் விமானப் படை தளத்தை வந்தடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சல்வீந்தர்சிங்கிடமும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சல்வீந்தர்சிங் உடந்தை?
ஆனால் சல்வீந்தர்சிங் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் அவர் மீதான சந்தேகம் வலுவடைந்தது. எல்லை தாண்டி ஊடுருவிய பயங்கரவாதிகளுக்கு அவர் உடந்தையாக இருந்திருப்பார் என உறுதியாக சந்தேகிக்கப்பட்டு வருகிறது.
உண்மை கண்டறியும் சோதனை
இதனால் சல்வீந்தர்சிங்கிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பஞ்சாப் ஆயுதப்படையின் 75-வது பிரிவின் துணை கமாண்டராக சல்வீந்தர்சிங் இடம்மாற்றம் செய்யப்பட்டார்.
அதிரடி சோதனை
இந்நிலையில் சல்வீந்தர் சிங்கின் வீடுகள், அலுவலகத்தில் நேற்று தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். குர்தாஸ்பூர், அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் இச்சோதனை நடத்தப்பட்டது.
நண்பர்கள் வீடுகள்...
பயங்கரவாதிகள் சல்வீந்தர்சிங்கை கடத்தியபோது உடனிருந்ததாக கூறப்படும் ராஜேஷ் வர்மா, மதன்கோபால் மற்றும் எஸ்.பி.யின் பெண் நண்பர் ஒருவரின் வீடுகளிலும் இச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.