பெங்களூரில் போதைப் பொருள் விற்ற நைஜீரிய வாலிபர் கைது: கஞ்சா, கொக்கைன் பறிமுதல்
பெங்களூர்: பெங்களூரில் போதைப் பொருள் விற்பனை செய்த நைஜீரியாவைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரில் நைஜீரியாவைச் சேர்ந்த பால் எசன்வா(27) என்பவர் போதைப் பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பாலின் நடவடிக்ககைளை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் பாலை இன்று போலீசார் கே.ஆர். புரத்தில் வைத்து கைது செய்தனர். கைது செய்யும்போது அவர் தப்பியோட முயன்றார். பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அவரை வளைத்துப்பிடித்தனர். அவரிடம் இருந்து 5 கிராம் கொக்கைன் போதைப் பொருளும், 50 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டபோது அவர் போதையில் இருந்தார். அவரால் அவரது பாஸ்போர்ட் எண்ணை கூட நினைவுபடுத்த முடியவில்லை. ஹொஸ்கோட்டேவில் வழக்குப்பதிவு செய்தபோது அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர் விசாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த பால் போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார்.