சோனியா விவகாரம்: மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங்குக்கு நைஜீரியா தூதர் கண்டனம்
டெல்லி: ராஜிவ் காந்தி நைஜீரிய பெண்ணை மணந்திருந்தால் காங்கிரஸ் தலைவராகி இருப்பாரா? என்று மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் பேசியதற்கு இந்தியாவுக்கான நைஜீரிய தூதர் ஓகங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பீகாரில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராஜீவ் காந்தி ஒரு நைஜீரிய பெண்ணை திருமணம் செய்து கொண்டிருந்தால் காங்கிரஸ் கட்சி அவருக்கு தலைவர் பதவியைத் தந்திருக்குமா என கேள்வி எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
கிரிராஜ்சிங்கின் இந்த பேச்சுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவுக்கான நைஜீரியா தூதர் ஓ.பி. ஓகங்கரும் கிரிராஜ்சிங்குக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்திய அமைச்சரின் கருத்து விரும்பத்தக்கதல்ல. மிக மோசமானது. எனக்கு பிரதமர் மீது நம்பிக்கை உள்ளது. இந்த விவகாரத்தில் அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம். நாங்கள் எந்த புகாரும் தெரிவிக்கப் போவதில்லை என கூறி உள்ளார்.